தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிட்டவில்லை!அருட்தந்தை சத்திவேல்
தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தையிட்டி திஸ்ஸ விகாரை என்பது நாட்டின் சட்டத்திற்கு எதிராகவும் பௌத்த தர்மத்திற்கு எதிராகவும் சிங்கள பௌத்த ஆதிக்க மன நிலையில் நின்று கட்டப்பட்ட சட்டவிரோத கட்டடமாகும்.
பௌத்த அடக்குமுறை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மக்கள் அறவழியில் போராட்டம் நடாத்தி வரும் சூழ்நிலையில் நேற்றைய (4.12.2025) போராட்டத்தின் போது பொலிசாரின் அராஜகம் சிங்கள பௌத்த அடக்குமுறை என்பதை ஆணித்தரமாக கூறுவதோடு; இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இனவாதம், மதவாதம் என்பவற்றிற்கு எதிரான அரசாங்கமாக தம்மை கூறிக் கொள்ளும் தற்போதைய தேசிய மக்கள் சக்தியும் அதன் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொலிசாரின் அடவாடி தனத்திற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து அராஜகத்தில் ஈடுபாட்டோருக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதோடு விகாரை விடயத்தில் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனவும் கேட்கின்றோம்.
கடந்த நவம்பர் மாத பௌர்ணமி தினத்தன்று தையிட்டியில் அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் அப்பிரதேசத்தின் இந்து பக்தர்களை விகாரைக்கு அண்மையில் உள்ள இந்து கோவிலிலும் சட்டவிரோத விகாரையின் பிக்குவாக இருப்பவரை அவர் தாங்கி இருக்கும் சட்டவிரோத கட்டிடத்திலும் சந்தித்தேன்.
அன்று பிக்குவோடு நடந்த உரையாடலில் பாதிக்கப்பட்ட மக்களோடு உரையாடல் ஒழுங்கு செய்தால் வருவீர்களா? என்று கேட்ட போது அதற்கு மறுத்துவிட்டார். அவர் அவ்விகாரையினதும் அப்பிரதேசத்தினதும் மதகுருவாக இருந்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அழைப்பு ஏற்படுத்திய போது வந்திருப்பார்.
ஆனால் சிங்கள பௌத்த மனநிலையையும் இராணுவ பாதுகாப்புடன் இருக்கும் மனப்பாங்கையுமே காணக்கூடியதாக இருந்தது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஒரு வருட ஆட்சியை கொண்டாடி முடித்திருக்கும் நிலையில் தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை. நீதி கிட்டுவதற்கான எந்தவிதமான அறிகுறியும் இதுவரை தென்படவில்லை.
ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நீதி கேட்டு பேராடுபவர்களை அச்சுறுத்துவதற்கு பொலிசாரை கடமையில் ஈடுபடுத்துவதும் என்றுமில்லாதவாறு இம் மாதம் அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதாகவே தோன்றுகிறது.

சட்டவிரோத விகாரை கட்டடத்தால் நிலமிழந்து பாதிக்கப்பட்டவரின் சார்பில் நின்று நீதி கேட்டு போராடுபவர்கள் கடந்த காலங்களிலும் பாதை ஓரத்தில் தற்காலிக கொட்டில் அமைத்து போராட்டம் நடாத்தி வந்திருக்கின்றனர். இந்த கொட்டிலால் எவருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
பொலிசாரின் வாகனங்களும் ஏனையோரின் வாகனங்களும் அப் பாதை வழியே சென்று வந்திருக்கின்றன. இந்த தடவை அது மக்களுக்கும் வழிபாட்டுக்கு வருகின்றவர்களுக்கும் தடையாக இருக்கின்றது என்று அதனை பலவந்தமாக பொலிசார் அகற்றியதோடு பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதை மனித உரிமைக்கு எதிரான செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.
வடக்கு கிழக்கு தமிழர்களின் அடிப்படை உரிமைகளையும் அவர்களின் அரசியல் அபிலாசைகளையும் மதிப்பிற்கும் கௌரவிப்பதற்கும் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்கவும் எந்த ஆட்சியாளர்களும் ஆயத்தமில்லை என்பதே உண்மை.
சட்டவிரோத விகாரை
தமிழர் தம் தாயகத்தில் படையினர் மற்றும் பொலிசார் சட்டத்தை மிதித்து செயல்படுகின்றனர் என்பதற்கான சர்வதேசத்திற்கு சாட்சியாகவே தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ளது. அது மட்டுமல்ல சிங்கள பௌத்தம் தமிழர்களுக்கு எதிரான செயற்பாட்டில் நாட்டின் சட்டத்தை மீறும் என்பதற்கு இது மிகப்பெரிய அடையாளமே சட்டவிரோத விகாரை கட்டடம் எனலாம்.

தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டிடத்திற்கு எதிரான அறப்போராட்டம் நீதி கிடைக்கும் வரை தொடரும். இதனை கட்சி அரசியலாக எவரும் கொச்சைப்படுத்தாது அரசியல் போராட்டமாக கருதி அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்குமாறு கூறுகின்றோம்.
அதனை விடுத்து அமைதி காத்து இனப்படுகொலை ஆட்சியாளர்களுக்கு ஆதரவளிப்பது என்பது எம்மை நாமே அழித்து கொள்வதாக அமையும்.
மேலும் நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமம் என அடிக்கடி கூறும் தற்போதைய ஜனாதிபதி அதனை தனது அரசியலுக்காக மட்டும் பாவிக்காது; லஞ்சம், ஊழல் என்பதற்கு மட்டும் கட்டுப்படுத்தாது இனங்களின் தனித்துவம், அவர்களின் அடையாள பாதுகாப்பு,அரசியல் உறுதி பாட்டு பாதுகாப்பு என்பதற்கும் பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எடுக்கின்றோம் என்றுள்ளது.
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam