துப்பாக்கி கேட்கவில்லை, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - சிலோன் தோட்ட அதிகாரிகளின் சங்கம்
தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிலோன் தோட்ட அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கின்றது.
சாமிமலை, ஓல்டன் மற்றும் ஏனைய பகுதிகளில் தோட்ட அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட அதிகாரிகள் ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் கறுப்பு பட்டி அணிந்து கறுப்புக் கொடி பிடித்து பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களின் கூட்டமும் ஊடக சந்திப்பும் டிக்கோயா தரவலைடி.எம்.சி.சி விளையாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் தோட்ட முகாமையாளர்கள் உதவி முகாமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அதில் கலந்து கொண்டு அதன் தலைவர் தயால் குமாரகே கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக தோட்டத்துறைகளில் பணிபுரியும் எமது ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதில் குறிப்பாக மிக அண்மையில் நடைபெற்ற ஓல்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் மிகவும் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டனர்.
இதனை நாங்கள் தொடர்ந்து பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. நாங்கள் தோட்டங்களைப் பாதுகாத்து அதில் பணிபுரிவதற்கே வந்திருக்கிறோம்.
அதில் ஆகவே எங்களை அவர்கள் தாக்குவதனை அனுமதிக்க முடியாது அவ்வாறு தொடர்ந்து நடைபெற்றால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
நாங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தால் தோட்டங்கள் இயங்காது நாட்டின் பொருளாதாரம் தான் பாதிக்கப்படும்.
கடந்த கோவிட் காலத்தில் கூட தோட்டத்துறை மாத்திரம் தான் இந்த நாட்டிற்கு வருமானத்தினை தேடிக் கொடுத்தது. ஆகவே அரசாங்கம் எங்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக இதை விடக் கரிசனையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இதற்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை. தொழிலாளர்களும் நிர்வாகமும் மிக ஒற்றுமையாகத்தான் இருந்தன. ஆகவே இதற்குப் பின்னணியில் தொழிற்சங்கம் மற்றும் சக்தியும் செயல்படுவதாகவே நாங்கள் கருதுகிறோம்.
எங்களுக்குத் தொழிலாளர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனைப் பேசித் தீர்த்துக் கொள்வதற்கு எத்தனையோ வழியிருக்கிறது. அவ்வாறு இல்லாது வன்முறைகளில் ஈடுபட்டால் இந்த நாட்டின் பொருளாதாரமும், அவர்களின் பொருளாதாரமும் தான் பாதிக்கும்.
கடந்த காலங்களில் கொழும்புக்குத் தேயிலை கொண்டு சென்ற லொறி ஒன்றினை ஹட்டன் பகுதியில் ஒரு பிரதேச சபை தலைவர் ஒருவர் திருப்பி அனுப்பி வைத்தார். இதன் நஷ்டத்தினை யார் கொடுப்பது ஆகவே எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்ப்பதற்கே நாம் முயற்சிகின்றோம்.
ஆகவே தொழிற்சங்கங்களும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு, நாங்கள் துப்பாக்கி கேட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நாங்கள் துப்பாக்கி கேட்கவில்லை.
எங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டோம். 150 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டங்கள் காணப்படுகின்றது. சில தோட்டங்களில் துப்பாக்கிகள் இருக்கின்றது. அது சம்மந்தமாக எங்களுக்குப் பயிற்சிகள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதுவேறு கதை.
நாங்கள் ஆயுதம் எதுவும் கேட்கவில்லை.எங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தான் கேட்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.



