மீண்டும் அநுர ஜனாதிபதியாகும் வரை அரசமைப்பு மாற்றம் வரவே வராது..! ஆளும் தரப்பின் திட்டம் குறித்து வெளிவந்துள்ள தகவல்
தற்போதைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்காமல் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும், புதிய அரசமைப்பை உடனடியாகக் கொண்டு வராமல் இருக்கவும் உறுதியான தீர்மானத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுத்துள்ளதாக அரசாங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உள்வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிய அரசமைப்பு எதுவும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்பதுடன், நடைமுறையிலுள்ள அரசமைப்பின் படியே அடுத்த ஜனாதிபதித் தேர்தலும் நடத்தப்படும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கோ அல்லது அதனை இலக்காகக் கொண்ட புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்துவதற்கோ அரசாங்கத்திடம் எந்தவொரு வேலைத்திட்டமோ அல்லது ஆயத்தமோ இல்லை என்றும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அதில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்கவை மீண்டும் களம் இறக்கி வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுவான உடன்பாடு என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை
இது தொடர்பாக குறித்த பத்திரிகையிடம் கருத்துத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினர் ஒருவர், "அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதல் இன்று வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து கட்சிக்குள் கலந்துரையாடப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
“எதிர்வரும் காலங்களில் எப்படியும் ஒரு புதிய அரசமைப்பைக் கொண்டு வந்து நிறைவேற்ற முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளில் இருந்து பலமான வேட்பாளர் ஒருவர் வருவது தற்போதைக்குத் தெரியவில்லை என்பதாலும், ஜனாதிபதி இன்னும் மக்களிடையே செல்வாக்குடன் இருக்கின்றமையாலும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், அந்தப் பதவியிலுள்ள அதிகாரத்தைத் தொடர்ந்தும் தேசிய மக்கள் சக்தி பயன்படுத்த வேண்டும் என்பதே (ஜே.வி.பி. உட்பட்ட) இரு கட்சிகளினதும் கருத்தாக உள்ளது.

2024 செப்டெம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது, ‘பணக்கார நாடு – அழகான வாழ்க்கை’ என்ற பெயரில் தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தின் 194 ஆம் பக்கத்தில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி புதிய அரசமைப்பைக் கொண்டு வருவோம் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற ஆட்சி முறை
“புதிய அரசமைப்பு வரைவு செய்யப்பட்டு, அது மக்கள் முன் வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்ட பின்னர், தேவையான மாற்றங்களுடன் பொதுவாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
அத்தோடு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி, நாடாளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதுடன், நிறைவேற்று அதிகாரங்கள் இல்லாத ஒரு ஜனாதிபதியை நியமிப்பதே அந்த அரசமைப்பின் நோக்கம் என்றும் அதில் விவரிக்கப்பட்டிருந்தது.
அடுத்த 5 மாதத்திற்கு கட்டாய நடைமுறை! அரச ஊழியர் முதல் பொது மக்கள் வரை அனைவருக்கும் முக்கிய அறிவுறுத்தல்
மேலும், 2015 - 2019 காலப்பகுதியில் புதிய அரசமைப்பை உருவாக்க முன்னெடுக்கப்பட்ட செயல்முறையை விரைவாக முடித்து, புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என்றும் அதன் 230ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.