மஹிந்தானந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?
விவசாய அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து எதிர்வரும் வாரம் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
உரப் பிரச்சினையை அரசாங்கம் சொதப்பிக் கொண்டுள்ளது. உண்மையில் ஏன் நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறுகின்றன? இந்த விவசாயிகளின் போராட்டம் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாக ஏற்படவில்லை. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரியுள்ளனர்.
இந்த போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிரானதாக மாற்றுவதற்கு அரசாங்கமே வழியமைக்கின்றது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் கூடுதல் காலத்தை எடுத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தின் தோல்வி நன்றாக வெளிப்பட்டுள்ளது.
துறைசார் அமைச்சர் மஹிந்தானந்த இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கத் தவறினால், அவரது நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர நேரிடும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.