பிரதேச சபை உறுப்பினர்கள் கொடுப்பனவுகளை தியாகம் செய்ய தீர்மானம்
நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் வரை, எமது சபையின் காலம் நிறைவடையும் வரை மாதம் எமக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை ஒரு நிவாரணமாக அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு ஏகமனதான ஒரு முடிவினை எடுத்துள்ளோம். இந்த விடயத்தை பிரதமருக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான மே மாதத்திற்காக 4 ஆவது சபையின் 50 ஆவது கூட்ட அமர்வு நேற்று (26)சபை மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில் இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தீர்மானம் எடுப்பதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக முடிவு மேற்கொண்டனர்.
முதலில் இக்கூட்ட அமர்வு மத அனுஸ்டானத்துடன் இடம்பெற்றதுடன் 2022 ஏப்ரல் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2022 ஏப்ரல் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் இடம்பெற்ற போது தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் உரை இடம்பெற்றது.
கொடுப்பனவுகளை ஒரு நிவாரணமாக அரசுக்கு வழங்குவதற்கு தீர்மானம்
இவ்வுரையின் போது எரிபொருள் பிரச்சினை, எரிவாயு பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட பின்னர் நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் வரை எமது சபையின் காலம் நிறைவடையும் வரை மாதம் எமக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை ஒரு நிவாரணமாக அரசுக்கு வழங்குவதற்கு ஏகமனதான ஒரு முடிவினை எடுத்துள்ளோம் என கூறினார்.
பொருளாதார பிரச்சினை, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம், உள்ளிட்ட காரணங்கள் மக்களிற்கு ஆதரவாக சபை அமர்வின் போது தவிசாளர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி 06 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி 06 உறுப்பினர்கள் 01 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளருமான வை.எல்.சுலைமாலெப்பையும் இணைந்து தவிசாளரின் முடிவிற்கு ஏகமனதாக ஆதரவினை தெரிவித்து தமது மாதாந்த கொடுப்பனவினை நாட்டின் பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படும் வரை தியாகம் செய்வதாக தீர்மானம் மேற்கொண்டனர்.
அத்துடன் இந்த நாட்டில் உள்ள இந்நெருக்கடி தீர்க்கப்படும் வரை பிரதமர் அவர்கள் ஏனைய அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் அதில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்களின் கொடுப்பனவினையும் எம்மை முன்னுதாரணமாக கொண்டு செயற்படுத்த ஆவண செய்ய வேண்டும் என எம்.ஏ.எம் தாஹீர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சபை அமர்வில் கடிதங்கள் பிற விடயங்கள் ஆராயப்பட்டு சபை நடவடிக்கைகள் யாவும் நிறைவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.