பிரித்தானிய பிரதமரின் சொத்துக்கள் மீதான தீவைப்பு வழக்கில் புதிய திருப்பம்
லண்டனில் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மருக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள் மீது நடத்தப்பட்ட தீவைப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில், "எல் மணி" (El Money) என்று அழைக்கப்படும் ஒரு மர்ம நபர் இருப்பதாக லண்டன் நீதிமன்றத்தில் திடுக்கிடும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் ஐந்து நாட்களுக்குள் பிரதமரின் தற்போதைய இல்லம், பழைய வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கார் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
திட்டமிட்ட சதி
இவை சாதாரண விபத்துக்கள் அல்ல என்றும், ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

இந்தத் தீவைப்புச் சம்பவங்கள் தொடர்பாக உக்ரைன் மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவர்களில் ரோமன் லாவ்ரினோவிச் என்பவரை "எல் மணி" என்ற நபர் டெலிகிராம் செயலி வாயிலாகத் தொடர்பு கொண்டு, பணம் தருவதாகக் கூறி இந்தத் தாக்குதல்களை நடத்தத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
மர்ம நபர்
அந்த மர்ம நபர் ரஷ்ய மொழியில் உரையாடியுள்ளதும், இவர்களுக்குத் தேவையான திட்டமிடல் மற்றும் பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பிடிபட்ட மூவரும் இந்தச் சதித்திட்டத்தில் தங்களுக்குத் தொடர்பில்லை எனத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

பிரதமரின் சொத்துக்களைச் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அங்கு வசிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இந்தத் தாக்குதல்கள் அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான ஒரு வீட்டில் பிரதமரின் மைத்துனி வசித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான தூண்டுதல் எது மற்றும் "எல் மணி" என்ற மர்ம நபர் யார் என்பது குறித்த விரிவான விசாரணை தற்போது லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.