சுகாதார அமைச்சின் நடவடிக்கை – வவுனியா வைத்தியசாலைக்கு நிபுணர்கள் நியமனம்
வட மாகாணத்தின் முக்கிய மூன்றாம் நிலை பராமரிப்பு வைத்தியசாலையான வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவி வந்த தீவிர மயக்கவியல் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் விடுத்த வேண்டுகோளையடுத்து, சுகாதார அமைச்சினால் புதிய நிபுணத்துவ மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்கள்
கடந்த மூன்று மாதங்களாக இந்த வைத்தியசாலையில் ஒரேயொரு மயக்கவியல் நிபுணர் (Consultant Anaesthetist) மற்றும் ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணர் (Consultant Surgeon) மட்டுமே பணியாற்றி வந்தனர்.
ஒரே மருத்துவரை நம்பி அவசர அறுவை கூடங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் இதய கதீட்டராக்கம் (Primary PCI) உள்ளிட்ட பல துறைகள் இயங்கியதால், வைத்தியசாலை சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், வேதனை தணிப்பு சிகிச்சைகள் மற்றும் தீவிர காயங்களுக்கான அவசர அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.
காது-மூக்கு-தொண்டை (ENT), வாய் மற்றும் முகச்சீரமைப்பு (OMF), மகப்பேறியல், எலும்பியல் மற்றும் சிறுநீரக சிகிச்சைகளுக்கான காத்திருப்புக்கான காலம் பல மடங்கு அதிகரித்தது.
மேலும் அவசர சிகிச்சைகளுக்காக நோயாளர்களை யாழ்ப்பாணம் அல்லது அனுராதபுரம் போதனா வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
நிரந்தர தீர்வு
பொதுமக்களும் சுகாதாரத் துறையினரும் இதுகுறித்து பெரும் கவலை வெளியிட்டிருந்த நிலையில், இவ்விடயம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனடியாகச் செயற்பட்ட அவர், சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவை நேரடியாகத் தொடர்புகொண்டு வவுனியா வைத்தியசாலையின் தற்போதைய அவலநிலை குறித்து விளக்கி, நிரந்தர தீர்வை வழங்குமாறு வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிய தீவிர மயக்கவியல் நிபுணர் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர் ஆகியோர் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நியமனங்கள் மூலம் ஸ்தம்பிதமடைந்திருந்த அறுவை சிகிச்சை சேவைகள் மீண்டும் சீரடைந்து, வவுனியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 22 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri