கனடாவுக்கு செல்லும் மாணவர்கள் விசாவில் அதிரடி மாற்றம்! இனி புதிய நடைமுறைகள்
சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதி (Study Permit) விதிகளில் முக்கிய மாற்றங்களை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) 2026 முதல் நடைமுறை செய்யப்படும் புதிய கல்வி அனுமதி (Study Permit) விதிகளை அறிவித்து, சில மாணவர்களுக்கு விதிகளை தளர்த்தியுள்ளது.
புதிய நடைமுறை
மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளை, விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது கல்வி நிறுவனங்களுடன் இணைந்த கூட்டுப் பாடநெறிகளில் (Joint Programmes) சேரும் மாணவர்கள், இனி ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தனித்தனியாக அத்தாட்சி கடிதம் (Attestation Letter) பெற வேண்டியதில்லை.

ஒரே ஒரு மாகாண அத்தாட்சி கடிதம் (Provincial Attestation Letter) போதுமானதாகும்.
மேலும், பொது நிறுவனங்களில் (Public Institutions) முதுகலை (Master’s) மற்றும் முனைவர் (Doctoral) படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு அத்தாட்சி கடிதம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள தொழிற்கல்வி பாடநெறிகளுக்கு (Vocational Programmes) சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், CEGEP கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் அத்தாட்சி கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்களின் எண்ணிக்கை
அத்துடன், விண்ணப்ப நடைமுறைகள் எளிதாக்கப்பட்டாலும், கனடாவுக்குள் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் பெருமளவில் குறைத்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர் சேர்க்கை இலக்கு 155,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்த இலக்கு 305,900 ஆக இருந்த நிலையில், தற்போது அது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வீட்டு வசதி தட்டுப்பாடு மற்றும் சமூக சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதே இந்த முடிவின் பிரதான நோக்கமாகும்.
விசிட்டிங் மாணவர்கள் (Visiting Students) மற்றும் பட்டதாரி பார்வையாளர்கள் (Graduate Visitors) வழக்கம் போல அத்தாட்சி கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த புதிய விதிகள் சில மாணவர்களுக்கு வசதியாக அமைந்தாலும், ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.