பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
இலங்கையின் 26 வது பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ரணில் விக்ரமசிங்க நாளை முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடியின் உண்மையான நிலைமைகள் மற்றும் நெருக்கடிக்கு தீர்வு கண்டு, இலங்கையை மீண்டும் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை பிரதமர் இதன் போது வெளியிடுவார் என பிரதமர் செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். ஆறாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, இதுவரை தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ததில்லை.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கான பொறுப்பை ஏற்று பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரது அரசாங்கத்திற்கு அதரவு வழங்க இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.