புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: வருகிறது கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டம்
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக மிகவும் முறையான மற்றும் கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (10.07.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஓய்வூதிய முறை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டத்தில் சேரும் தொழிலாளர்கள், தங்களுக்கு தேவையான வகையில் ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யலாம். அதாவது, ஓய்வுக்கு பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதையோ அல்லது பணிக்காலம் முடிந்ததும் மொத்தத் தொகையை ஒரே தடவையாக பெறுவதையோ அவர்களே தீர்மானிக்கலாம்.
சட்டபூர்வமாக அனுப்பப்படும் பணத்தின் பதிவுகளை முறையாகப் பராமரிக்கவும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு
தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு பதிவாகியுள்ளது. இருப்பினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர்.
இதனை மாற்றியமைக்கும் விதமாகவே இந்தத் தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அமையும். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.