உரிய காலத்தில் பட்டங்களை பெறாத மாணவர்களை நீக்குவதற்கான புதிய சட்டம்-9 முதல் 10 ஆண்டுகள் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள்
பல்கலைக்கழங்களில் சேர்ந்து உரிய காலத்தில் பட்டங்களை பெற்றுக்கொள்ளாத மாணவ, மாணவிகளை பல்கலைக்கழங்களில் இருந்து நீக்குவது சம்பந்தமான சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பரீட்சைகளை எழுதாது அரசியலில் ஈடுபடும் மாணவர்கள்
சில மாணவ, மாணவிகள் பரீட்சை எழுதுவதை விட அரசியல் நடவடிக்கைகள் முக்கியம் என சிந்தித்து, பரீட்சைகளை எழுதாது பட்டப்படிப்புக்கான காலம் முடிந்து 9 முதல் 10 ஆண்டுகள் வரை பல்கலைக்கழங்களின் விடுதிகளில் தங்கியுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
உரிய காலத்தில் பரீட்சைகளை எழுதாது நீண்டகாலம் பல்கலைக்கழகங்களின் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ, மாணவிகள் தொடர்பில் கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழங்களின் உபவேந்தர்களில் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளை கைப்பற்றப்படாத பிரதேசம் போல் வைத்திருப்பது 21 ஆம் நூற்றாண்டின் ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் பொருந்தாது.
இந்த மாணவர்கள் நீண்டகாலமாக விடுதிகளில் தங்கியிருப்பதால் புதிய மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்குவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போவதுடன் பகிடிவதை போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
சட்ட சிக்கல் காரணமாக மாணவர்களை வெளியேற முடியாத சிக்கல்
பல்கலைக்கழங்களில் சேரும் மாணவ, மாணவிகள் உரிய காலத்தில் பரீட்சைகளை எழுதி, பல்கலைக்கழங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக ஆணைக்குழு சட்டத்தில் இல்லை என்பதால், அவர்களை வெளியேற்ற முடியாத சிக்கலான நிலைமை காணப்படுகிறது.
இதனால்,புதிய சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், அந்த சிக்கல் தீர்க்கப்படும்.
மாணவர்களுக்கு சுகவீனமான நிலைமை அல்லது வேறு தனிப்பட்ட காரணங்களினால், உரிய காலத்தில் பரீட்சைகளை எழுத முடியாமல் போனால், பரீட்சைகளை எழுத மேலும் 50 வீதமான கால அவகாசம் வழங்கப்படும்.
புதிய சட்டத்திற்கு அமைய வழங்கப்பட்ட காலத்திற்குள் பரீட்சைகளை எழுதி, பட்டங்களை பெறாத அனைத்து மாணவ, மாணவிகளும் பல்கலைக்கழங்களில் இருந்து நீக்க முடியும் எனவும் சுரேன் ராகவன் கூறியுள்ளார்.