இலங்கையில் கோவிட் - 19 தொற்றின் புதிய மாறுபாடு! - வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
இலங்கையில் கோவிட் - 19 தொற்றின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலாவிஜ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த புதிய வைரஸ் மாறுபாடு அதிக வேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ளது. புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவர் முந்தைய மாறுபாட்டிற்கு மாறாக 5-6 பேர் வரை அதைப் பரப்ப முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முந்தைய மாறுபாட்டின் போது நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒன்று அல்லது இரண்டு பேருக்கே நோய் தொற்றினை பரப்ப முடியும். அண்மையில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் அறிகுறிகளில் சிறிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
வைரஸ் பாதிக்கப்பட்ட பெரும்பாலான இளைஞர்களுக்கு கடுமையான அறிகுறிகள் காணப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.