தமிழ் மக்களுக்கான ஜனநாயகம் - புதிய ஆரம்பத்திற்கு அழைப்பு
முன்னாள் போராளிகளின் புதிய ஜனநாயக அரசியல் பயணம் “தாயக அரசியல் துறை” ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் போராளி செ. ஆனந்தவர்மன்(அரவிந்தன்) தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகள்
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் எதிர்கால அரசியல் இலக்குகளை ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக முன்னெடுப்பதற்காக “தாயக அரசியல் துறை” என்ற புதிய ஜனநாயக மக்கள் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் வழியில் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய முன்னாள் போராளிகள், தமது வரலாற்று அனுபவங்களையும் அரசியல் உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு, இனிவரும் காலத்தில் ஜனநாயக அரசியலை தமது அரசியல் கருவியாகக் கொண்டு மக்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இது கடந்த காலத்தை மறுப்பதற்கான முயற்சி அல்ல. மாறாக, கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஜனநாயக வழியில் முன்னெடுக்கும் புதிய அரசியல் பாதையின் தொடக்கமாகும்.
மக்கள் மயமான அரசியல் இயக்கம் தாயக அரசியல் துறை முன்னாள் போராளிகளை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இல்லாமல், தமிழ் மக்களின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும் மக்கள் மயமான அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்கப்படும்.
தமிழர்களின் பலத்தை நிலை நாட்டும் அமைப்பு
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்பையும் ஒன்றிணைத்து, மக்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
எமது அரசியல் அடித்தளம் தாயகம் – தன்னாட்சி – சுயநிர்ணயம் – தமிழ் தேசியம் ஆகும்.
தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளை பாதுகாப்பதுடன், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான தீர்வுகளை ஜனநாயக ரீதியில் முன்னெடுப்பதற்கு தாயக அரசியல் துறை செயற்படும்.

மக்களின் வாக்குரிமை மற்றும் ஜனநாயக பங்கேற்பை மாற்றத்திற்கான முக்கிய கருவியாகக் கொண்டு, எதிர்காலத்தில் தேர்தல் அரசியலிலும் பங்கேற்று, மக்களிடமிருந்து நேரடியான அரசியல் ஆணையைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
புதிய தலைமுறைக்கான புதிய அரசியல் பாதை “ஆயுதப் போராட்டத்தின் வழியில் நின்ற நாம், இனி ஜனநாயக அரசியலை ஆயுதமாகக் கொண்டு மக்களுடன் இணைந்து பயணிப்போம்.” எமது அரசியல் பயணம் எந்தவொரு தனிநபரின் அதிகாரத்திற்காகவும் அல்ல.
அது தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம், அரசியல் பங்கேற்பு மற்றும் எதிர்கால தலைமுறைகளின் நல்வாழ்வை மையமாகக் கொண்டதாக இருக்கும்.
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற விரும்பும் அனைவரையும் இந்தப் புதிய அரசியல் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். மக்களே எமது பலம், ஜனநாயகமே எமது வழி, அரசியலே எமது ஆயுதம், என குறிப்பிடப்பட்டுள்ளது.