புதிய சட்டமா அதிபராக சஞ்சய ராஜரட்ணம்
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற பேரவை நேற்று முற்பகல் அதன் தலைவர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதனிடையே இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் உறுப்பினராக சஞ்ஜீவ ஜயவர்தனவை மீண்டும் நியமிக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த பரிந்துரைக்கும் நாடாளுமன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனை தவிர காணாமல்போனவர்கள் தொடர்பான செயலகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஜயந்த சாந்த குமார விக்ரமரத்னவும் இழப்பீடு தொடர்பான செயலகத்தின் உறுப்பினராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டப்ளியூ.பீ.பீ.பெர்னாண்டோவையும் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பேரவையின் இந்த கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.