சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்:கஞ்சனவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) உறுப்பினர்களாக நியமிக்கப்படும் நபர்கள், அந்த ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் மின்சார சபை சட்டத்தை படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களான பிரதித் தலைவர் உதேனி விக்ரமசிங்க மற்றும் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை (3) ஆணைக்குழுவிலிருந்து பதவி விலகினர்.
புதிய உறுப்பினர் நியமனம்
இதனை தொடர்ந்து டக்ளஸ் என். நாணயக்கார இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நேற்று(05.02.2023) நியமிக்கப்பட்டார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் தன்னிச்சையான நடவடிக்கை மற்றும் அவரது தொழில்ரீதியற்ற தன்மை காரணமாக குறித்த உறுப்பினர்கள் பதவி வலகியதாக இலங்கை மின்சார சபை (CEB) கூறியது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனக ரத்நாயக்க,“ஆணைக்குழு உறுப்பினர்கள் பொதுவாக ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
ஆணைக்குழு உறுப்பினர்களின் நியமனம் மற்றும் பதவி விலகல் குறித்து பொறுப்பான அமைச்சர் முடிவெடுக்க வேண்டும்.
மின்சாரதுறை அமைச்சருக்கு விவாதிக்க அதிகாரம் இல்லை
ஆனால் மின்சாரதுறை அமைச்சருக்கு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அதிகாரம் இல்லை, ஏனெனில் இது அவரது அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனம் இல்லை.
எனவே, அவர் தனது சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்.
ஆணைக்குழுவின் உறுப்பினர் யாராக இருந்தாலும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு அது தொடர்பில் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆணைக்குழு உறுப்பினராக யார் நியமிக்கப்பட்டாலும், நான் யாருடனும் இணைந்து பணியாற்ற முடியும்.டக்ளஸ் நாணயக்கார நியமனம் நடைமுறைக்கு உட்பட்டது.
மேலும் ஆணைக்குழுவின் உறுப்பினர் யார் நியமிக்கப்பட்டாலும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபையின் 2009 திருத்தங்களை அவர்கள் படிக்க வேண்டும்.”என கூறியுள்ளார்.