அனைவரையும் காவு கொண்ட நேபாள விமான விபத்து! முக்கிய தடயங்கள் சிக்கின
நேபாளத்தில் கடந்த பல தசாப்தத்தில் இடம்பெற்ற மோசமான விமான விபத்தில் உயிர்தப்பியோரை தேடும் நடவடிக்கை கைவிடப்பட்டதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிர் தப்பியவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு பூஜ்யமாக உள்ளது. என்றாலும் விமானத்தின் தரவு மற்றும் குரல் பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரியான டெக் பஹதுர் தெரிவித்துள்ளார்.
72 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் காத்மண்டுவில் இருந்து சுற்றுலாத் தளமான பொகோராவை நோக்கி புறப்பட்ட யெடி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது கடந்த ஞாயிறன்று (15) விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
முக்கிய தடயங்கள் கைப்பற்றப்பட்டன
“இதுவரை நாம் 68 சடலங்களை மீட்டுள்ளோம். மேலும் நான்கு சடலங்களை தேடி வருகிறோம்” என்று டக்சி மாவட்ட தலைமை மாவட்ட அதிகாரி பஹதுர் தெரிவித்தார்.
இது நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இடம்பெற்ற மோசமான விமான விபத்தாக உள்ளது. விமான நிலைத்தை நெருங்கிய இந்த விமானம் வேகமாக சுழலும் காட்சி கைபேசி ஒன்றில் பதிவாகியுள்ளது.
பின்னர் விமானநிலையத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் செடி நதிப் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.
நேபாளத்தில் நேற்று துக்கதினம் அறிவிக்கப்பட்டதோடு விபத்துக்கான காரணத்தை கண்டறிய அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் கைப்பற்றி உள்ளனர். கைப்பற்றப்பட்ட காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் ஃபிளைட் டேட்டா ரெக்கார்டர் ஆகிய இரண்டும், சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விபத்து பற்றிய முக்கிய தடயங்கள் இந்த பெட்டிகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் என்பது வானொலி ஒலிபரப்புகள், காக்பிட்டில் விமானிகளுக்கு இடையேயான உரையாடல்கள் மற்றும் என்ஜின் சத்தங்கள் போன்ற மற்ற ஒலிகளையும் பதிவு செய்கிறது.
ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டரில் விமானத்தின் வேகம், பறக்கும் உயரம் மற்றும் திசை, பைலட்டின் செயல்பாடுகள் மற்றும் முக்கியமான அமைப்புகளின் செயல்திறன் போன்ற 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்கள் பதிவாகும்.