நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு அரசியல் தலையீடே காரணம்(Photos)
வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக படி அமைத்தமை, அதற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை நேற்று(22.09.2022) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் சென்று வழிபாடு செய்யவும், ஆலயத்தினை புனருத்தானம் செய்யவும் நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டதுடன், குறித்த ஆலயத்தில் புதிய அபிவிருத்தி செய்த குற்றசாட்டில் ஆலய பூசகர், நிர்வாகத்தினர் மீதும் நெடுங்கேணி பொலிஸாரால் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
ஆலய பிரச்சினை தொடர்பான விசாரணை
இந்த வழக்கு தொடர்பில் சிவசேனை அமைப்பின் வன்னி பிராந்திய இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,“வெடுக்கு நாறிமலை ஆலய தலைவர், செயலாளர், பொருளாளர், பூசகர் குறித்த வழக்கிற்கு சமூகமளித்திருந்தார்கள். சட்டத்தரணி தயாபரன் தலைமையிலான எட்டு சட்டதரணிகள் குழாம் இதற்கு ஆதரவாக முன்னிலையாகியிருந்தார்கள்.
இந்த வழக்கில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். அதில் பொலிஸ் அதிகாரியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் குறித்த பிரச்சினைக்கு அரசியல் தலையீடே காரணம் என கூறியிருந்தார்.
தொல்பொருள் திணைக்களத்தின் விளம்பர பலகை
அத்துடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆலய நிர்வாகத்தினர், பூசகர் இதற்கு காரணம் இல்லை எனவும் அந்த ஆலயத்தில் பூசைக்கு தடையில்லை எனவும், இதற்கு காரணமான உண்மையான குற்றவாளி யார் என்பதை வருகின்ற 13.10.2022 ஆம் திகதிக்கு முன்பதாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்ற நீதவானால் உத்தரவு பணிக்கப்பட்டிருந்தது.
மேலும், எமது ஆலயங்களில் சிலர் அரசியல் நடத்துவதே இந்த பிரச்சினைக்கான காரணம். எமது ஆலயங்களின் வழக்கத்தின்படி ஒரு ஆலயத்தில் நித்திய பூஜைகள் கட்டாயம் நடைபெற வேண்டும்.
அதற்கு எந்த தடையும் இல்லை அபிவிருத்தி பணிகளை
செய்வதற்கே தடை செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் விளம்பர பலகை
இதையே கூறுகின்றது.”என தெரிவித்துள்ளார்.