நெடுந்தீவு கடற்பகுதியில் பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு!
நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி, நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கடலில் மிதந்து வந்த 9 பொதிகளை கடற்படையினர் மீட்டு, அவற்றை சோதனையிட்டனர்.
சுமார் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் என்பன காணப்பட்டுள்ளன.
மேலதிக சட்ட நடவடிக்கை
கடத்தல்காரர்கள், கடற்படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, கடற்படை படகினை கண்ணுற்று, பொதிகளை கடலுக்குள் வீசி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மீட்கப்பட்ட பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.