கச்சத்தீவில் கடற்படை புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தல்
கச்சத்தீவில் கடற்படை புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்களை புகைப்படமெடுத்து அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கச்சதீவு முன்னரங்க பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் கச்சதீவுக்குள் செல்ல விசேட அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தினை நோக்கி பயணித்த பொழுது ஊடகவியலாளர்களை சூழ்ந்து கொண்ட 5 இற்கு மேற்பட்ட சிவில் உடை தரித்த நபர்கள் இந்தியாவில் இருந்தா வருகை தந்தீர்கள் ? ட்ரோன் கமரா கொண்டு செல்கிறீர்கள் என தெரிவித்தனர்.
ஊடகவியலாளர்கள் பரிசோதனை
தொடர்ந்து எம்மை பரிசோதனை செய்து இலங்கை ஊடகவியலாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு தொடர்ந்து பயணிக்கின்றோம் என அடையாள அட்டையினையும் காட்டி நீங்கள் யார் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தி கேட்ட பொழுது நாம் கடற்படை புலனாய்வாளர்கள் என தெரிவித்தனர்.
தொடர்ந்து எமது கைப்பைகளை சோதனையிடுமாறும் ட்ரோன் கமராவினை கொண்டு செல்லவில்லை என தெரிவித்த பொழுதும் ஊடகவியலாளர்களை புகைப்படமெடுத்தனர்.
தொடர்ந்து நீங்கள் எதற்காக புகைப்படம் எடுக்கின்றீர்கள் என ஊடகவியலாளர் புலனாய்வாளர்களுடன் முரண்பட்ட பொழுது குறித்த பகுதியில் தரித்து நின்ற கடற்படை ஊடக பிரிவினர் அவர்கள் ஊடகவியலாளர்கள் பரிசோதனை செய்தே அனுப்பி வைக்கப்பட்டனர் என தெரிவித்து ஊடகவியலாளர்களை செல்ல அனுமதி வழங்கினர்.
அதீத கண்காணிப்பு
இந்நிலையில் வழமையினை விட இவ்வருடம் புலனாய்வாளர்களின் அதீத கண்காணிப்பு வலயமாக கச்சத்தீவு காணப்படுகின்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (14) பிற்பகல் ஆரம்பமாகி இன்றையதினம் (15) நிறைவு பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

