தமிழர்களின் நில ஆக்கிரமிப்பை ஆராயும் சர்வதேச மாநாட்டில் நவநீதம் பிள்ளை - டொனி பிளயரின் பாரியார்
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு - கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும் இதற்கெதிராக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “தமிழர் தாயகத்தை இழத்தல் : தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம் காணுதலும்” என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டு ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய தினம் பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 12.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை (இலங்கை நேரம் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை) சூம் (Zoom) தொழிநுட்பம் மூலம் இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. Zoom Video Webinar தொழிநுட்பத்தின் ஊடாக நடைபெறும் இந்த மாநாட்டில் உலகின் பல பாகங்களில் இருந்தும் கலந்து கொண்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களிலும் இந்த மாநாடு நேரடியாக காண்பிக்கப்படும். இந்த மாநாட்டில் தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்கள் ஆராயப்படவிருப்பதால் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து பயன்பெறுமாறு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பொதுமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் சிறப்பு விருந்தினராக இந்த மாநாட்டில் கலந்து கொண்டு நீதியரசர் விக்னேஸ்வரனுடன் இணைந்து இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து முக்கிய உரை ஆற்றவிருக்கின்றார்.
இந்த மாநாட்டில் ஐ.நா மனித உரிமைகள் சபை முன்னாள் உயர்ஸ்தானிகரும், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதியரசருமான திருமதி நவநீதம் பிள்ளை, பிரித்தானியாவின் சர்வதேச மனித உரிமைகள் வழக்குரைஞரும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளயரின் பாரியருமான செரி பிளயர் மற்றும் கனடாவின் சிறப்பு மிக்கோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவரும் 2010ஆம் ஆண்டு மனித உரிமைகள் செயற்பாடுகளுக்காக நோபெல் பரிசுக்கு முன்மொழியப்பட்டவருமான சர்வதேச மனித உரிமைகள் வழக்குரைஞர் டேவிட் மாடஸ் ஆகியோரும் இந்த மாநாட்டில் முதன்மை உரை ஆற்றுகின்றார்கள்.
