161வது தேசிய பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 161வது தேசிய பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி உயிரிழந்த பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களை நினைவு கூரும் முகமாக தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் இன்று (21.03.2025) நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் திணைக்களங்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் நினைவு கூறப்பட்டன.
கொல்லப்பட்ட பொலிஸாரை நினைவு கூறும் நிகழ்வு
பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயசூரிய சிந்தனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்ற நிகழ்வின் கீழ் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருன ஜயசுந்தர ஆலோசனையின் கீழ் தேசிய பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு மட்டக்களப்பிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
1864ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இன்று வரையான காலத்தில் சுமார் 5759 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களை நினைவு கூறும் நிகழ்வாக தேசிய ரீதியில் வருடந்தோறும் மார்ச் மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட 12 பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப உறவுகள் என பலர் கலந்து கொண்டனர்.



