நாசிவன்தீவு மணல் அகழ்வு திட்டம் நிறுத்தல் - வியாழேந்திரன் அதிரடி
வாழைச்சேனை நாசிவன்தீவு கிராமத்தில் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராய்ச்சி திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறும், மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற எந்தவொரு செயற்றிட்டத்தினையும் அரசாங்கம் செயற்படுத்துவது இல்லை என்றும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன்தீவு கிராமத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட இலங்கை மீன்பிடித்துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராய்ச்சி திட்டத்தை நிறுத்துமாறு பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் விசேட ஒன்று கூடல் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாசிவன்தீவு கிராமத்தில் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராய்ச்சி திட்டமானது சுற்றால் அதிகார சபையின் அனுமதி பெறப்படாமல் உள்ளது. அத்தோடு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினரின் கருத்தின் பிரகாரம் மண் கழுவும் பட்சத்தில் தண்ணீர் உவர் தன்மை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நாசிவன்தீவு கிராம மக்கள் கடந்த காலங்களில் உவர் தன்மை இல்லாத நீரினை பருகி வந்த நிலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் மூலம் கிணற்றுத் தண்ணீர் உவர் தன்மையை அடைந்துள்ளது என்பது உண்மையான விடயம்.
ஆகவே நாசிவந்தீவு கிராமம் கடல் அரிப்புக்குள் உள்ளாக்கப்படும் நிலைமையில் காணப்படும். அத்தோடு கிராம அதிகாரியின் தனியார் காணியில் மணல் அகழ்வும் இடம்பெற்றுள்ளது.
குறித்த மக்கள் குடிநீர் பிரச்சனையை எதிர்நோக்கி வரும் நிலையில் பல்வேறுபட்ட பிரச்சனைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற எந்தவொரு செயற்றிட்டத்தினையும் அரசாங்கம் செயற்படுத்துவது அல்ல. ஆகவே மக்களின் நலன்களைத்தான் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
நாசிவன்தீவு கிராமத்தில் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராய்ச்சி திட்டமானது செயற்படுத்துவதற்குச் சாத்தியமானதாக இல்லை. எனவே வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தினுள் குறித்த வேலைத்திட்டம் கடந்த காலத்தில் ஏற்பட்ட போது எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை.
குறித்த திட்டம் தொடர்பில் பிரதேச செயலாளர், உயர் அதிகாரிகள், மீனவர் மற்றும் பிரதேச மட்ட அமைப்புக்கள் ஆகியோரின் கருத்தின் பிரகாரம் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் அல்லது மக்கள் பிரச்சினை ஏற்படுத்தாத இடத்தில் உரிய திணைக்களங்களின் அனுமதியைப் பெற்று வேறு இடத்தில் நடைமுறைப்படுத்தல் அவசியமாகும்.
எனவே நாசிவன்தீவு கிராமத்தில் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராய்ச்சி திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், உரிய இடத்தினை தெரிவு செய்து மக்கள் மற்றும் அமைப்புக்களின், உரிய திணைக்களங்களின் அனுமதி பெற்ற பின்னர் வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் இதனை மீறித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் குறித்த நபர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலிஸாருக்கு இதன்போது பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன், கரையோர பேணல் திணைக்களத்தின் பொறியியலாளர் எம்.துளசிதாசன், கடலோர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உதவிப் பணிப்பாளர் எஸ்.தயாபரன், சுற்றாடல் அதிகாரி சபையின் உதவிப் பணிப்பாளர் எஸ்.கோகுலதாசன், வாழைச்சேன மீன்பிடி துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் றெஜினோல்ட் விஜிதரன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, கரையோர பேணல் திணைக்களத்தின் பிரதேச செயலக திட்டமிடல் உதவியாளர் வி.ஏ.பைறூஸ், கிராம அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
















கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
