திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச
இலங்கையின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அங்கு பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துக்கோரலவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் குறித்த திட்டங்கள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் கோமரங்கடவல - திரியாய் பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை குளங்களைப் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் எத்தாபெந்திவெவ குளத்தின் அபிவிருத்தி திட்டத்தை அமைச்சர் பார்வையிட்டதுடன் அங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.
மேலும் திருகோணமலை நகர்ப் பகுதியில் அமைந்துள்ள மெக்கேஸர் விளையாட்டு மைதானம் பல வருடங்களாகப் புனரமைக்கப்படாமல் இருப்பதாகவும், அதனை மிக விரைவில் புனரமைக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோமரங்கடவல - கல்கடவல பிரதேசத்தில் விளையாட்டு மைதானமும் நிர்மாணம் செய்யப்பட்டு இளைஞர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாமல் குச்சவெளி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை பார்வையிட்டதுடன் மக்களின் பிரச்சினைகளையும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.
இதில் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர்
தேனுக விதானகமகே மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரல, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன் பாண்டிகோரல, மொரவெவ பிரதேச சபை தவிசாளர் ஜகத் குமார வேரகொட, கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சந்தன எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.