நாமலின் உரை இரத்தானமைக்கு இதுதான் காரணம்.. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு வெளியிட்ட தகவல்
தமிழர்கள் மீது ராஜபக்சக்கள் நிகழ்த்திய இனப்படுகொலை காரணமாகவே, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ச நிகழ்த்தவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது,
வரலாற்று முக்கியத்துவம்
"ஒக்ஸ்போர்ட் யூனியன் ஏற்பாடு செய்த உரை அல்லது உரையாடல் நிகழ்வுகள் எந்தக் காரணத்துக்காகவும் இரத்துச் செய்யப்படுவதில்லை.

அவ்வாறு இரத்துச் செய்வதை கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகவும், தன் புகழுக்கான இழுக்காகவும் அந்த நிறுவனம் கருதுகின்றது.
இவ்வாறான நிலையில், நாமல் ராஜபக்சவின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டமை அரிதான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும்.
இதற்கு, நாமலின் குடும்பத்தால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையே காரணம்.
ராஜபக்ச குடும்பத்தினர்
நாமல் ராஜபக்சவின் குடும்பம் தமிழர்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சொல்லொண்ணாத் துயரங்கள் உலகறிந்தவை.

அந்தப் பாதகமான செயல்களின் தொடர்ச்சியாகவே இன்றும் ராஜபக்ச குடும்பத்தினர் பார்க்கப்படுகின்றார்கள்.
அத்தகைய ஒரு பின்னணியைக் கொண்டவருக்கு உயரிய மேடைகளை வழங்குவது அறமற்றது என்பதைத் தமிழ் மாணவ சமூகம் மிகத் தெளிவாக எடுத்துரைத்தது. இதை ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் யூனியன்கள் தெளிவாக உணர்ந்துள்ளன என்றுள்ளது.