விமர்சிப்பதை விட்டுவிட்டு பாதாள உலகை கட்டுப்படுத்துங்கள்! அநுர அரசிற்கு நாமல் அறிவுரை
சமூக கட்டமைப்பில் பாதாள குழுக்களின் செயற்பாடு தீவிரமடைந்துள்ளது. எம்மை விமர்சித்துக் கொண்டிருக்காமல் பாதாள உலகக்குழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அநுர அரசிடம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வெளிநாட்டில் இருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி
"விவசாயிகளைப் பலப்படுத்தி நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதாகக் குறிப்பிட்டே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது.
ஆனால் விவசாயிகள், மீனவர்களை பலப்படுத்தாமல் வெளிநாட்டில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வர்த்தகர்களை பலப்படுத்துவதையே அரசு செய்கின்றது. இப்போது வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது.
ஒரு பேனையில் அரிசி மாபியாவை இல்லாமல் செய்வதாகக் கூறினர். ஆனால் இப்போது நடப்பது வேறு. டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நட்டஈடு வழங்கப்படவில்லை. வீடுகள் வழங்கப்படவில்லை.100 இலட்சம் ரூபா வழங்குவதாகக் கூறினர். பொய்யை நாடாளுமன்றத்துக்குள் கூறினர்.
விவசாயிகள், மீனவர்களைப் பாதுகாக்காமல் - உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் இந்த அரசால் பயணிக்க முடியாது.
ரில்லியன் ரூபா நிதி கையிருப்பில் இருப்பதாகக் கூறினர். அதில் நட்டஈட்டை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்கள். ஆனால் வழங்கிய காசோலைகள் திரும்பி வருகின்றன. வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
தேசிய பாதுகாப்பு
கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பில் கதைக்கின்றீர்கள். போர்க் காலத்திலும் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளன.
ஆனால் நீங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறும் நிலையில் உங்கள் கட்சித் தலைமையகத்துக்கு அருகில் - இராணுவத் தலைமையகத்துக்கு அருகில் பாதுகாப்பு பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கின்றது.

இது குறித்து அரசின் பதில் என்ன? சட்டத்தரணி கொல்லப்பட்ட பின்னர் திட்டமிட்ட குற்றக் கும்பல் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி என்று அரசு பதிலளிக்கின்றது. அப்படியென்றால் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் சட்டத்தரணியே. அவரின் சேவை பெறுநர் யார்? அவரும் திட்டமிட்ட குற்றக்கும்பலுக்காக முன்னிலையாகியுள்ளார். அது அவர்களின் தொழில்சார் கடமையே.
இவ்வாறான நிலைமையில் சட்டத்தரணி கொல்லப்படும் போது அந்தக் கொலையை ஒருங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் மீது சுமத்தி நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். சில ஒருங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களின் பின்னால் அரசு இருக்கின்றது என்பது தெளிவானது.
அது பெலவத்த அலுவலகத்தில் இருந்தா? ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தா? பிரதமர் அலுவலகத்தில் இருந்தா நிர்வாகிக்கப்படுகின்றது என்று எமக்குத் தெரியாது.
1988 மற்றும் 1989 காலங்களில் நடந்த சம்பவங்கள்
பிரதமர் மன்னார் சென்றிருந்தார். யுத்தம் தங்களிடம் கேட்டுச் செய்யவில்லை என்று கூறியுள்ளார். 1988 மற்றும் 1989 காலங்களில் நடந்த சம்பவங்கள் எங்களிடம் கேட்டா இடம்பெற்றது.
பயங்கரவாதமும் இருந்தது. இப்போது அவை இல்லை. இந்த நேரத்தில் அங்குள்ள மக்களின் மனநிலையுடன் விளையாடுவது நியாயமற்றது. உங்களால் இராணுவ வீரரை வீரர் என்று கூற முடியவில்லை.
ஆனால் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது இராணுவத்தைப் பயன்படுத்த முடியும். அவசர நிலைமைகளில் அவர்களிடமே ஓடிப் போக வேண்டியுள்ளது.
எனினும் அவர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்க முடியவில்லை. அச்சுறுத்தல் விடுத்து அரசைக் கொண்டு செல்லவே முயற்சிக்கின்றீர்கள். அரகலய போராட்டக் காலத்தில் ஊர்சாகப்படுத்தி இப்போது 12 பேர் தூக்கு மேடைக்குப் போயுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துங்கள். நாட்டில் தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை விடுகின்றோம்." என்றார்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam