சொந்த சமூகத்தைக் காட்டுக்கொடுக்கும் தலைவர்களே இவர்கள்..! கூட்டணிக்கு தொடர் கண்டனம்.
முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம் கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக சமத்துவ மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் வைத்தியர் வை.எல்.எம். யூசுப் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்று(14.07.2026) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் கடந்த திங்கட்கிழமை(13.07.2026) தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கென புதிய கூட்டணி ஒன்றை அமைத்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தச் சவாலையும் கண்டனத்தையும் முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பாகவே இந்த 6 கட்சிகளின் இணைவைப் பார்க்க முடிகிறது. மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக மாறியுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள், தங்களை மீண்டும் செல்லுபடியான காசுகளாக மாற்றிக் கொள்வதற்காகவே கொழும்பில் ஒன்றுகூடி இவ்வாறானதொரு பொதுத் தளத்தை அமைத்துள்ளனர்.
இவர்களால் நிச்சயமாக எமது மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இதுவரை காலமும் இனவாதமும் மதவாதமும் பேசி, தற்போது மக்கள் செல்வாக்கை இழந்து வருவதனாலேயே ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் மக்கள் எழுச்சி என்ற போர்வையில் புதிய வடிவத்தில் வந்துள்ளனர்.

பழைய சோற்றைச் சூடாக்கி, இப்போதுதான் சமைத்த சுடு சோறு என்று கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இவர்களது பழைய கதைகள் எடுபடாத காரணத்தால், புதிய வடிவில் கட்டுக்கதைகளைக் கூறி ஏமாற்ற முனைகிறார்கள். இக்கூட்டணியின் உருவாக்கம் எமக்கு பாரிய சந்தேகத்தை எழுப்புகிறது.
பகிரங்க விவாதத்திற்குத் தயாரா? தலைவர்களுக்குச் சவால்
முஸ்லிம் சமூகத்தின் நில, நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை வன்மையாகக் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன், தமிழ் - முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பகிரங்க விவாதம் ஒன்றிற்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
இதேவேளை, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் எந்த நேரத்திலும் பகிரங்க விவாதத்திற்கு வரத் தயாராக இருந்தால், அவர்களுக்கு பிரச்சினைகள் குறித்து முழு விளக்கமளிக்கவும் தான் தயாராக இருக்கின்றேன் என்றார்.