பாதணிகளை வீட்டில் வைத்து விட்டு ஒலிம்பிக்கிற்கு செல்லும் போட்டியாளர்கள் உள்ளனர் - நாமல்
ஓடுவதற்கான பாதணிகளான ஸ்பைக்ஸை வீட்டில் வைத்து விட்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் போட்டியாளர்கள் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீர வீராங்கனைகளில் மூன்று பேர் மட்டுமே தகுதி காண் அடிப்படையில் தெரிவானவர்கள். ஏனையவர்கள் வைல்ட் கார்ட் அடிப்படையில் தெரிவானவர்கள்.
இலங்கையிலிருந்து ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டுவதற்கு உரிய மனநிலையில் இல்லை. தேசிய மட்டத்தில் போட்டிகளில் வெற்றியீட்டுவதே அவர்களின் பிரதான இலக்காக உள்ளது.
அதனைத் தாண்டி செல்லும் மனநிலை கிடையாது. இம்முறை ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய வீராங்கனை ஓடுவதற்காக பயன்படுத்தப்படும் பாதணியை வீட்டில் வைத்து விட்டு சென்றுள்ளார்.
விளையாட்டு வீர வீராங்கனைகளின் ஒழுக்க விதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.