சர்வதேச அமைப்புகளுக்கு பயந்து பொலிஸாரை அரசியல் மயமாக்கியுள்ள அரசாங்கம்: நாமலின் பாரிய குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உதவி செய்த பணம் வழங்கிய புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கத்தின் இயலாமையை அறிந்து கொள்வார்களோ என்ற பயத்தில் அரசாங்கம் செயற்படுவதாக மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்.
பொலிஸாரை அரசியல் மயமாக்கும் அரசாங்கம்
அரசாங்கம் பொலிஸை பயன்படுத்தி பலாத்காரமாக சாட்சியங்களை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதோடு வாக்குமூலங்களை அச்சுறுத்தி பெற்றுக் கொள்கின்றனர்.
நாட்டில் பாரிய நெருக்கடி ஒன்றை வைத்துக் கொண்டு அரசியல் இலாபங்களுக்காக அரசாங்கம் செயற்படுகிறது.
அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு சர்வதேசத்தின் தலையீடு தொடர்பில் நாங்கள் கதைக்கவில்லை என்றாலும் சர்வதேச அமைப்புகள் இது தொடர்பில் அறிந்திருக்க வேண்டும்.
ஏனென்றால் அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றுவதற்கு அவர்களின் பங்களிப்பும் காணப்பட்டது. தாங்கள் ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களின் தன்மையை அந்த அமைப்புகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சியினராக நாங்கள் நாட்டில் ஜனநாயகம் இல்லை என சர்வதேசத்திற்கு இவ்வாறான சந்தர்ப்பத்தில தெரிவித்தது குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவல்ல.
அரசாங்கம் நீதியாக நடந்து கொள்வதென்றால் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்.கோவிட் தொற்றின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது ஜே.பி.வி எப்படி நடந்து கொண்டது என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால் நாங்கள் அவ்வாறான செய்றபாடுகளில் ஈடுபட மாட்டோம் என குறிப்பிட்டார்.