மொட்டுவின் வெற்றிக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவே காரணம் : நாமலுக்கு தயாசிறி பதிலடி
"ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்ததால்தான் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றது" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டைப் பகுதியில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கௌரவமாக வெளியேறலாம் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"எவரும் தனித்து செயல்படுவதில் பலன் இல்லை. 2019 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் 15 இலட்சம் வாக்குகள் தீர்மானம் மிக்கதாக இருந்தன. எனவே,
எதிர்காலத்தில் ஜனாதிபதி அல்லது பிரதமராகக் காத்திருக்கும் நாமல் ராஜபக்ச எமது
கட்சி ஆதரவு இல்லாமல் எப்படிப் பிரதமராகின்றார் எனப் பார்த்துக்கொள்வோம்"
என்றும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.