அநுர அரசை சாடிய நாமல் - தப்பியோடினாலும் தண்டனை நிச்சயம்! வசந்த சமரசிங்க பதிலடி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டன் செல்வதற்கோ அல்லது அங்கு அவருக்கு எதிராகப் போராட்டங்கள் நடப்பதற்கோ தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்பல்ல என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
லண்டன் பயணத்தின் போது நாமல் ராஜபக்சவுக்கு எதிராகப் புலம்பெயர் அமைப்புகள் முன்னெடுத்து வரும் எதிர்ப்புகள் மற்றும் கேம்பிரிட்ஜ் உரை இரத்துச் செய்யப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாமலின் லண்டன் விஜயம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்ச லண்டன் செல்வதற்கு இந்த அரசு எந்தத் தடையையும் விதிக்கவில்லை. ஆனால், அவர் அங்கு செல்லும் போது மக்கள் ஏன் கறுப்புக்கொடி காட்டுகின்றார்கள்.

ஏன் அவரது உரையை இரத்துச் செய்யச் சொல்கின்றார்கள் என்பதை அவர்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் அவர்கள் செய்த தவறுகளின் விளைவைத்தான் இன்று சர்வதேச ரீதியாக அறுவடை செய்கின்றார்கள். அதற்கும் எமது அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தமது தோல்விகளுக்கும், சர்வதேச ரீதியாகத் தமக்கு ஏற்படும் அவமானங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது பழிபோடுவது ராஜபக்சக்களின் வழக்கமான பாணியாகிவிட்டது.
விசாரணைகள் தொடரும்..
லண்டனில் இருப்பவர்கள் தன்னிச்சையாகப் போராடுகின்றார்களே தவிர, நாங்கள் யாரையும் தூண்டி விடவில்லை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமக்கு செல்வாக்கு இல்லை என்பதை ராஜபக்ச தரப்பினர் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.

அவர், லண்டனில் உரை நிகழ்த்துகின்றாரா, இல்லையா என்பது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விசாரணைகள் இங்கு சட்டப்படி தொடரும்.
அதே போன்று, வெளிநாடுகளில் தப்பித்து ஓடி ஒளிந்தாலும், மக்கள் பணத்தைச் சூறையாடியவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என காட்டமாக பதிலளித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri