நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் முஸ்லிம் பாபாவுக்குத் தினமும் எரியும் விளக்கு(Video)
நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடம் ஒரு முஸ்லிம் பாபாவின் சமாதி இருக்கின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என சிரேஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இன்று வரை அந்த சமாதிக்கு குறித்த ஆலயத்திற்குள்ளேயே விளக்கு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும் எனவும் வினவியுள்ளார்.
அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மதவாதம்
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, நல்லூர் கந்தசுவாமி ஆலயம் என்பதே ஒரு மத ஒற்றுமையின் அடையாளம். அதையும் தாண்டி, இறந்துபோன பாபாவை ஆன்மிகவாதியாகப் பார்த்து, மதத்தையும் தாண்டி இந்த ஆலயம் ஆன்மிக ரீதியில் உயர்ந்து நிற்கின்றது. ஆனால், இந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வைத்து மாநகர சபையை மையப்படுத்தி மதவாதத்தைக் கிளப்புகின்றார்கள்.
ஆகையினால், மதவாதம் இங்கே இருப்பதாகக் கருதவில்லை. அதாவது, மதவாதம் என்பது மக்கள் மத்தியில் இல்லை. ஒரு மதத் தலைவர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அல்லது அரசியலிலுள்ள சிலர் இதை ஏதோ நோக்கங்களுக்காகக் கிளப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இது தான் உண்மை.
மதச்சாயம்
அத்துடன், மதத் தலைவர்கள் ஆன்மிக ரீதியாகத் தான் மக்களை வழிநடத்தலாம். ஆன்மிகம் என்று வந்து விட்டாலே அன்பு அகிம்சை எல்லாம் வந்து விடும் அங்குக் குரோதம், வேறுபாடு பிரிவினைக்கிடமில்லை. ஆகையினால் மதவாத தலைவர்கள் மதத்தைச் சரியாக வழிநடத்தினால் போதுமானது.
அவர்கள் அரசியலுக்குள் வந்து எல்லாவற்றையும் மதச்சாயம் பூசி குழப்புவதில் ஈடுபடத் தேவையில்லை. அப்படி அரசியலில் ஆர்வம் காட்டுகின்றவர். அல்லது அரசியலுக்குள் வந்து மத வாதத்தைக் கிளப்புகின்றவர் நல்ல மதத் தலைவராக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
