ராஜபக்சக்கள் போல் மக்களை நாங்கள் ஒடுக்கவே மாட்டோம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி
ராஜபக்சக்கள் போன்று அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கமாட்டோம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நாம் கடந்த கால அரசுகள் செய்தபடி அவசரகாலச் சட்டத்தை மக்களின் உரிமைகளை அடக்குவதற்காகப் பயன்படுத்த மாட்டோம். எமது அரசு, பொதுமக்கள் பாதுகாப்பையும், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக மட்டுமே சட்டங்களைப் பயன்படுத்தும்.
மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கம்
கடந்த ஆட்சியில் இருந்த ராஜபக்சக்கள் அவசரகாலச் சட்டத்தை அரசு மீதான விமர்சனங்களை அடக்கவும், அரசியல் எதிரிகளைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தியிருந்தது. ஆனால் எமது அரசு சட்டத்தின் வழியாக மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்துடன் செயற்படுகின்றது.

எதிர்க்கட்சிகள் சொல்வது போல் நாம் செயற்பட முடியாது. எமது அரசின் நோக்கம் ஒழுங்கும் சமத்துவமும் காக்கும் விதமாகச் சட்டத்தை பயன்படுத்துவதே ஆகும். நாட்டு மக்கள் எமது அரசை நம்பியிருக்கின்றார்கள். எனவே, எமது நடவடிக்கைகள் சொல்லில் மட்டும் இல்லாமல் செயலிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
நாம் சட்டத்தின் உண்மையான நோக்கத்தைக் கடைப்பிடிப்போம். நாம் மக்களின் உரிமைகளை மதிப்போம். அவசரகாலச் சட்டம் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் சமூக அமைதிக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |