அண்மையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் கைதி ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை
15 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 55 தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டும் என நடேசு குகநாதன், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த தமிழ் கைதியான நடேசு குகநாதன் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் கடந்த 16ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் கட்டினை சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தன்னை விடுதலை செய்து குடும்பத்துடன் இணைந்தமைக்கு ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு நடேசு குகநாதன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் ஜனாதிபதியால் 3 பேர் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் சிபாரிசு காரணமாக நான் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளேன் என நினைக்கின்றேன்.
ஜனாதிபதிக்கு என் குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அந்த குழு என்னை தெரிவு செய்தமைக்கு மிக மிக நன்றிகள்.
இன்னும் 55 தமிழ் கைதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் சுமார் 15 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கின்றார்கள்.
என்னைப் போன்று அவர்களையும் விடுதலை செய்து அவர்களின் குடும்பங்களுடன் இணைந்து வாழ வழி செய்ய வேண்டும்.
ஜனாதிபதி இதனை செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை அரசியல் கைதிகளிடம் இருக்கின்றது.
மிக விரைவில் அவர்களும் விடுதலையாகி குடும்பத்துடன் இணைய வேண்டும் என கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
12 வருட சிறைவாசத்தின் பின்னர் அரசியல் கைதி ஒருவர் விடுதலை!
குடும்பத்துடன் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி!