12 வருட சிறைவாசத்தின் பின்னர் அரசியல் கைதி ஒருவர் விடுதலை!
இறுதிப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்து மறுவாழ்வு பெற்ற பின்னர் விடுதலையாகி, மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும் கைதுசெய்யப்பட்டு கடந்த 12 வருடங்களாக வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடேசு குகநாதன் இன்று (16) கொழும்பு நீதிவான் நீதிமன்றதத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவரின் விடுதலை தொடர்பாக அவருடைய குடும்பத்தினரின் கருத்துத் தொடர்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு, உடையார்கட்டைச் சேர்ந்த நடேசு குகநாதன் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியான 2009.05.18 அன்று ஓமந்தையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
அங்கிருந்து அவர் வவுனியா - பூந்தோட்டம் முகாம் மற்றும் மகாரம்பைக்குளம் முகாமில் விசாரணை செய்யப்பட்ட பின்னர், ஒரு மாதம் வவுனியா யோசேப் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் 2009.08.24 ஆம் திகதி பாரப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பூஸாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 21 மாதங்கள் இருந்தார்.
பின்னர் 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து நீதிமன்றக் கட்டளைப்படி 10 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டார். அங்கு அடிப்படை மனித உரிமைகள் வழக்குப் பதிவு செய்து 2012.03.24 அன்று புனர்வாழ்வு எனத் தீர்ப்பளிக்கப்பட்டு வவுனியா மருதமடு முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஒருவருட புனர்வாழ்வு நிறைவு செய்து 2013.03.24 அன்று விடுதலை செய்யப்பட்டார். பின்னர் 2013.07.11 ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் மீண்டும் கைது செய்ப்பட்டு 4 ஆம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பூஸா முகாமுக்கு மாற்றப்பட்டு 18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டார்.
பின்னர். 2015.01.02 நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அங்கு எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் அங்கிருந்து மகசின் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
2013ஆம் ஆண்டில் இருந்து வழக்குகள் எவையும் இன்றி தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றினூடாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவி இவரின் விடுதலைக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு 100 இற்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது – என்றுள்ளது.