யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்: பொலிஸார் வெளியிட்ட தகவல்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த துப்பாக்கி போலி துப்பாக்கி என்றும், குறித்த நபரை தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் கொடுத்த தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மேலும், அவர் சந்தைக்கு கொண்டுச் சென்ற துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேக நபர் சந்தைக்கு கொண்டு சென்றது போலி துப்பாக்கி எனவும் , அவர் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் அடுத்தக்கட்ட விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக தகவல்- தீபன்

முதலாம் இணைப்பு
யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை 06.03 மணிக்கு வந்துள்ளார்.
இதன்போது அவரது இடுப்புக்குள்ளும் கைத்துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாருக்கு தகவல்
இவ்வாறு வருகை தந்த நபர் தனிநபர் ஒருவரது பெயரை விசாரித்துவிட்டு, வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அங்கு விசாரித்ததாக கூறப்படுகிறது.

கையில் கொண்டு வந்த பணிஸை சாப்பிட்டுக்கொண்டு, பின்னர் அங்கு பச்சை மிளகாயை வாங்கிக்கொண்டு சென்ற காட்சி அங்கிருந்த சிசிரிவி கருவியில் பதிவாகியுள்ளது.
சுன்னாகம் பொலிஸார் விசாரணை
இவ்வாறு வந்தவர் கைகளுக்கு கறுப்புநிற கையுறைகளையும், தலையில் தலைக் கவசத்தையும் அணிந்திருந்ததை சிசிரிவி காட்சிகளில் அவதானிக்க முடிந்துள்ளது.

குறித்த நபர் அங்கிருந்து சென்றதும், சந்தையில் இருந்தவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.