மர்மமான முறையில் உயிரிழந்த யாழ்.மருத்துவபீட மாணவன்! பிரதமருக்கு அனுப்பப்பட்ட அவசர மின்னஞ்சல்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் மரணம் தொடர்பிலான விசாரணை குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு உயிரிழந்த மாணவனின் சகோதரர் அவசர மின்னஞ்சல் ஒன்றினை நேற்று அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் மரணம் தொடர்பிலான விசாரணைக்குழுவில் குற்றவாளிகளின் உறவினர், நண்பர்கள் இடம்பெற்று இருப்பதனால் முக்கியமான தகவல்கள் பல மறைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் 3வது வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் என்ற இளைஞன் கடந்த 17.11.2020 அன்று வாடகைக்கு தங்கி இருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இது தற்கொலை என கூறி எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில்,இது தற்கொலை அல்ல கொலை என அவரின் சகோதரன் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், இராணுவத்தளபதி ஆகியோரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்போது இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (mahinda Rajapaksa)பொலிஸ்மா அதிபருக்கு பணித்திருந்தார்.
இந்நிலையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த விசாரணைக்குழுவில் கொலையாளிகளின் உறவினர், நண்பர்கள் உள்ளடங்கியுள்ளதாகவும், அவர்களை நீக்கி விசாரணைகளை முன் கொண்டு செல்ல உதவுமாறு அவரின் சகோதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |