ஆளுநரின் போக்குவரத்து ஏற்பாடுகள் கண்காணிப்பில் யாழிலிருந்து புறப்பட்ட மியான்மார் அகதிகள்(Photos)
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து ரோஹிங்கிய அகதிகளை மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி இன்று வியாழக்கிழமை (22) காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியுடன்மூலம் மீரிகான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆளுநரின் கண்காணிப்பில்...!
பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியா நோக்கி செல்ல தயாராக இருந்த நிலையில் படகு பழுதடைந்து தத்தளித்த நிலையில் வெற்றிலை கேணி கடற்பரப்பை அன்மித்த கடற் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் படகு ஓட்டி உற்பட சுமார் 105 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த அகதிகள் மியன்மாரில் இருந்து சென்று பங்களாதேசில் தங்கி இருந்த முஸ்லிம்கள் என அறியக் கிடைக்கும் நிலையில் இந்தோனேசியா நோக்கி கடல் வழியாக செல்ல தயாராக இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களுக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கான உணவு மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
அதில் இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை இரவு உரிய ஏற்பாடுகள் இன்றி இரு
பேருந்துகளில் அகதிகளை நீர் கொழும்புக்கு அனுப்பி வைக்க தயாராக இருந்த
நிலையில் உயர் மட்டத் தலையீட்டால் யாழ்.சிறைச்சாலையில் அவர்களை தங்க
வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
டிசம்பர் 19ம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன்,104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார்.
அத்துடன், நாடொன்றுக்கு 104
பேரையும் கடத்த முயற்சித்தவரை 2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கவும் உத்தரவிட்டார்.
இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயவின் நேரடி கண்காணிப்பில் வட மாகாண அமைச்சுகளின் மூன்று பேருந்துகள் மூலம் குறித்த அகதிகள் இட நெருக்கடி இன்றி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பவுள்ளனர்.
அத்துடன் அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ ரீதியிலான பிரச்சினைகள் ஏற்பட்டால் உதவி வழங்குவதற்காக ஒரு ஆம்புலன்ஸ் வண்டியும் கூடவே பயணிக்கவுள்ளது.
மேலதிக செய்தி-தீபன்