லசித் மாலிங்க தொடர்பில் தனது வருத்தத்தினை பகிர்ந்துள்ள நாமல் ராஜபக்ச
தமக்கும், தமது தந்தையான பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் மிகவும் பிடித்த கிரிக்கட் வீரர் டுவன்ரி 20 உலகக்கிண்ண குழாமில் உள்ளடக்கப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்த லசித் மாலிங்கவே தமக்கும் தமது தந்தைக்கும் மிகவும் பிடித்த வீரர் என தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண போட்டித்தொடரில் லசித் மாலிங்க விளையாடினால் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் தாம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
லசித் மாலிங்க இந்த நாட்டின் கிரிக்கட் விளையாட்டுக்காக மிகவும் சிறந்த சேவையை வழங்கியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு ஓர் திட்டத்திற்கு அமைய குழாமை தெரிவு செய்துள்ளதாகவும்,அதில் தலையீடு செய்ய அமைச்சர் என்ற வகையில் தாம் விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த கால விளையாட்டுத்துறை அமைச்சர்கள் விட்ட தவறுகள் காரணமாக அணி பின்னடைவை எதிர்நோக்கியதாகவும் தாமும் அதே தவறுகளை செய்யப்போவதில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.