முத்தையா முரளிதரனுக்கு ஜம்முவின் கதுவாவில் நிலம் : சட்டசபையில் கேள்வி
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு(Muttiah Muralitharan) ஜம்முவின் கதுவாவில் நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ கட்சியின் உறுப்பினர் முகம்மட் யூசுப் தாரிகாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் தற்போதைய பத்தீட்டு கூட்டத்தொடரின் போது, அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இந்த நில ஒதுக்கீட்டின் சட்டப்பூர்வ அடிப்படை குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
நிலக் குத்தகை
இலங்கையின் முன்னாள் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு, கதுவாவில் 1,642 கோடி ரூபாய் மதிப்பிலான அலுமினிய கேன் உற்பத்தி மற்றும் பானங்கள் நிரப்பும் அலகு அமைக்க சுமார் 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது நிறுவனமான சிலோன் பெவரேஜஸ், ஏற்கனவே கர்நாடகாவில் ஒரு ஆலையைக் கொண்டுள்ளது.
இப்போது ஜம்மு மற்றும் காஷ்மீரிலும், அந்த வணிகம் விரிவடைந்து வருகிறது. இதன்படி, நிலக் குத்தகை கடந்த ஆண்டு ஜூன் 14 அன்று கையெழுத்தானது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இந்தநிலையில், குறித்த பிரச்சினை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நில ஒதுக்கீட்டு கொள்கைகள், குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்பான விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர்கள் நில ஒதுக்கீட்டு செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கோருகின்றனர்.இதனால் அரசியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பிரச்சினையாக, இது மாறியுள்ளது.
இதேவேளை, சட்டசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விவசாய உற்பத்தி அமைச்சர் ஜாவைத் அகமது டார் இந்த விடயத்தை ஒப்புக்கொண்டார்.
எனினும், குறித்த நிலம் வருவாய்த் துறையின் அதிகார வரம்பிற்குள் வருவதாக அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |