"இலங்கைத்தீவினுள் முஸ்லிம்கள் ஒருபோதும் ஒரு ஆயுதப்போராட்டத்தை நடத்த முடியாது"
எந்த ஒரு முஸ்லிமும் ஐஎஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூட அவ்வாறு இருக்கலாம்"" என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இக்கருத்தானது இலங்கைத் தீவைப் பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கான இன அழிப்பின் இன்னொரு வீதி வரைபடம் வரையப்பட்டுவிட்டது என்பதைக் கோடிட்டுக்காட்டுகிறது என கட்டுரையாளர் தி.திபாகரன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில்,
இவ்வாறு இலங்கையின் நாடாளுமன்றத்தில் அமைச்சர் குறிப்பிடுவதிலிருந்து சிங்கள பௌத்த பேரினவாதம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும், சிங்கள மக்களைத் தொடர்ந்து குடும்ப ஆதிக்கத்தில் வைத்திருப்பதற்கும் அவர்களுக்கு ஒரு இனவாத அல்லது மதவாத இரத்தக்களரி தேவையாக உள்ளது என்பதை முன்னுணர்த்துகிறது. இதனை மேற்படி கூற்றுக்கள் துல்லியமாக வெளிக்காட்டுகின்றன.
இன்று இருக்கின்ற இந்துமாசமுத்திர கொதிநிலையில் இந்தியா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டிருக்கின்ற கரடுமுரடான முரண்பாடுகளுக்குள் தாம் சிக்காமல் இருப்பதற்கு இந்தியாவை அனுசரிக்கிறார்கள். மறுபுறம் ஒரு மதவாத இரத்தக்களரியை சிங்கள ஆளும் தரப்பினர் தோற்றுவிக்க முனைகிறார்கள் என்பதே உண்மையாகும்.
இன்றைய நிலையில் இலங்கையில் இருக்கின்ற முஸ்லீம்களால் ஒருபோதும் ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்த முடியாது. அதற்கான அகபுறக் காரணிகளும் அவர்களிடம் இல்லை. ஆயுதப் போராட்டத்திற்கான பின்தளம் என்பது இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகள் தான். அவை இலங்கை தீவிலிருந்து மிக நீண்ட தொலைவிற்கு அப்பால் உள்ளன.
அத்தோடு முஸ்லிம்களுக்கான பின் தளமாக ஒருபோதும் இந்தியா அமையப் போவதும் இல்லை. அமையவும் முடியாது. இந்தியாவுக்கும் இலங்கைக்குமான பாக்கு நீரிணை முற்று முழுதாக இந்தியாவினதும் இலங்கையினதும் படைகளின் கையில் உள்ளது. அத்தோடு பாக்கு நீரிணையானது தமிழக மீனவர்களினதும் ஈழத்தமிழ் மீனவர்களினதும் பயன்பாட்டிலுமே உள்ளது.
எனவே பாக்கு நீரிணையை இஸ்லாமியர்களால் இலகுவில் பயன்படுத்த முடியாது. அடுத்து அவர்கள் பயன்படுத்தக்கூடிய அடிப்படையை இலங்கை முஸ்லிம்கள் கொண்டிருக்கவும் இல்லை. ஆகவே முஸ்லிம்களுக்குக் கிட்டிய தூரத்தில் இருக்கக் கூடியது என்றால் அது பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தான்.
இலங்கையிலிருந்து சுமார் 2000 மைல்கள் நீளமான நீண்ட அரேபியக் கடற்பரப்பில் பயணம் செய்துதான் பாகிஸ்தானுடனான தொடர்பாடல்களைப் பேணுவதும் வழங்கல்களைப் பெறுவதும் இலகுவானதல்ல. அவ்வாறே வங்காள தேசமும் 1500 மைல்களுக்கு அப்பால் உள்ளது.
அதற்கும் வங்கக் கடலில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். வங்கக் கடல் இந்தியாவின் கண்காணிப்பில் இருப்பதனால் அதுவும் இலகுவான காரியமல்ல. அத்தோடு ஆழ்கடலில் பயணம் செய்யக்கூடிய கடல் அனுபவத்தையோ கடல்சார் தொழில்நுட்பத்தை இலங்கை முஸ்லீம்கள் தற்போது கொண்டிருக்கவில்லை.
விமானம் மூலமாக ஈரானுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ, வங்காள தேசத்துக்கோ இஸ்லாமியர்களால் பயணம் செய்ய முடியும். அங்கு பயிற்சியையும் பெற முடியும். ஆனால் பயிற்சி பெற்றவர்களுக்கான ஆயுதங்கள் கிடைப்பது என்பது மிக மிகக் கடினமானது.
ஆகவே இலங்கையினுடைய அமைவிடம் அதனைச் சூழவுள்ள கடற்பரப்பில் இன்றைய நிலைமை என்பவற்றைக் கவனத்தில் கொண்டு பார்த்தால் முஸ்லிம்களால் இலங்கை தீவில் ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்த முடியாது.
ஆகவே இஸ்லாமியர்கள் இலங்கைத் தீவுக்குள் ஒரு புரட்சியை அல்லது ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கான பின் தளம் என்பது மிக நீண்ட தொலைவிலேயே உள்ளது.
வங்கக் கடலும், அரேபியக் கடலும் இந்தியாவின் கூர்மையான கண்காணிப்புக்கு உட்பட்ட இருப்பதால் கடல்வழியைப் பயன்படுத்த முடியாது. எனவே இலங்கை முஸ்லிம்களால் ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கான வளத்தையும் பெறமுடியாது என்பதுதான் யதார்த்தம்.
அத்தோடு இன்றைய நிலையில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் ஆகிய இஸ்லாமிய நாடுகள் இலங்கை அரசுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றன. அந்த உறவு அவர்களுடைய பொருளியல் நலன் சார்ந்ததும், பாதுகாப்பு நலன் சார்ந்ததுமாகும்.
எனவே தமது நாடுகளின் தேசியப் பாதுகாப்பு, மற்றும் பொருளியல் நலன்களை மீறி இலங்கை முஸ்லிம்களுக்கு தமது ஆதரவினை ஒருபோதும் வழங்க மாட்டார்கள் என்பதே உண்மையாகும்.
மேலும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்குத் தனியான தனித்துவமான ஒரு தாயக நிலப்பகுதி கிடையாது. இலங்கையின் வடகிழக்குப் பகுதியான தமிழர் தாயகத்தில் இன்று மொத்த முஸ்லிம்களில் 40%ம் தென் பகுதியில் 60% மும் வாழ்கிறார்கள்.
தமிழர் தாயகத்தில் அம்பாறையில், மட்டக்களப்பு மாவட்டங்களில் குறித்த சில பகுதிகளில் செறிவாக வாழ்ந்தாலும் அவர்கள் அம்பாறையில் சிங்கள மக்களினால் குடிசனப் பரம்பலில் முற்றுகைக்கு உள்ளானவர்களாகவே வாழ்வதைக் காணலாம். அவ்வாறே புத்தளத்தின் சில பகுதிகளில் இதேநிலைமையே காணப்படுகிறது.
ஏனைய சிங்கள பகுதிகளில் அவர்கள் சிங்கள மக்களுக்குள் ஆங்காங்கே சிதறி வாழ்வதனால் முஸ்லிம் மக்களினால் தென்பகுதியில் ஒன்றுகூடவோ, ஒருங்கிணையவோ முடியாது. எனவே குடிசனப் பரம்பல் அடிப்படையிலும் அவர்கள் ஒரு போராட்டத்தை நடத்துவதற்கான தளப்பிரதேசம் என்ற ஒன்று அவர்களுக்கு கிடையாது.
எனவே இலங்கை தீவினுள் எதிர்வரும் 40 வருடத்திற்குள் முஸ்லிம்களால் ஒரு ஆயுதப் போராட்டத்தை ஒருபோதும் நடத்த முடியாது. ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்களால் எந்த பேரரசிற்கு எதிராகவும் போராட முடியும்.
அவர்கள் எத்தகைய ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டாலும் அவர்களால் அதற்கெதிராக தொடர்ந்து போராடவும் முடியும். ஆப்கானிஸ்தானின் புவியியல் அமைப்பும், அதன் தரைத்தோற்ற இயல்புகளும், அந்த மக்களுக்குப் போராடுவதற்கான பாதுகாப்புக் கவசமாக உள்ளன.
ஆப்கானிஸ்தானின் பழங்குடி வாழ்க்கை முறையும், உலகத் தொடர்புகளிலிருந்து ஒதுங்கி வாழக்கூடிய மலைவாழ் வாழ்வும், மந்தைகளுடன் கூடிய மலைவாழ் தானிய உற்பத்தியும், மண்ணுக்கேற்ற இயல்பான வாழ்க்கை முறையும் அவர்களுக்குப் பாதுகாப்பு கவசங்களாக உள்ளன.
அத்தோடு ஆப்கானிஸ்தான் நான்கு பக்கங்களிலும் அதன் எல்லைப் புறங்களில் இஸ்லாமிய நாடுகளைக் கொண்டிருக்கிறது. இதனால் அவர்கள் இலகுவாக எல்லை கடந்து தமக்கான பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்தோடு தமக்கான வளங்களையும் பின்தள உதவிகளையும் பெறவும் முடியும். எனவே ஆப்கானிஸ்தான் மீது உலகின் அனைத்து பேரரசுகளும் ஒன்றிணைந்து போரிட்டாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் எழுச்சி பெற வாய்ப்புகள் உள்ளன.
அதேவேளைப் பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலையையும் இங்கே கவனத்திற் கொள்ளவேண்டும். அவர்கள் பங்களாதேஷில் அடைக்கலம் தேடமுடியுமே தவிர பௌத்த பேரினவாத பர்மாவில் போராட்டத்தை நடத்த முடியாமல் உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேவேளை ஈழத் தமிழர்கள் நடத்திய ஆயுதப் போராட்டம் என்பது தாய்த் தமிழகத்தைப் பின்புலமாகக் கொண்டிருந்தது. அத்தோடு அது வெறும் 20 மைல்கள் தொலைவில் உள்ள தமிழகத்தைப் பாக்கு நீரிணையின் ஊடாக இலகுவில் கடந்துவிட முடியும்.
அனைத்து வளங்கள் வசதிகளையும் தமிழகத்தை பின் தளமாகக் கொண்டு பெற்றுவிட முடியும். ஈழத்தமிழர் நீஒ்ட கடற்பயணங்கள் செய்யக்கூடிய கடல்சார் அனுபவங்களைக் கொண்டுள்ளார்கள்.
மற்றும் ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் மொழி பண்பாட்டியல் ரீதியாக ஒத்த தன்மை உடையவர்கள். ஆதலினால் அவர்களின் உதவியுடன் ஈழத் தமிழர்களால் ஒரு ஆயுதப் போராட்டத்தை இலங்கையில் நடத்த முடிந்தது.
இந்நிலையில் முஸ்லிம்கள் ஒரு போராட்டத்தை நடத்துவார்கள் அல்லது முஸ்லீம்கள் நடத்த முற்படுகிறார்கள் என்பது மிக அபத்தமானது. அவ்வாறு சிங்கள பௌத்த இனவாதிகள் கூறுவார்களேயானால் அது சிங்களத் தலைவர்கள் ஓர் இன அழிப்பிற்கான முன்வரைபை வரைந்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தப்பட வேண்டும்.
உண்மையில் இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பை முஸ்லிம்கள் நடத்தினார்கள் என்று மேலெழுந்தவாரியாகச் சொன்னாலும் அந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட தெஹ்ரான் குழுவினர் வெறும் அம்புகளே.
எய்தவர்கள் சிங்கள பௌத்த பேரினவாதிகள் என்பதே உண்மையாகும். இந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியை மிக நுணுக்கமாக ஆராய்ந்தால் அது புலப்படும். முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின் ராஜபக்சக்கள் வெற்றி நாயகர்களாக வலம் வந்தவர்கள்.
2015 தேர்தலில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தமிழர்களும் மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்குள் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை மையம் கொண்டு ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து ""நல்லாட்சி அரசாங்கம்"" ஒன்றை நிறுவிவிட்டனர்.
ராஜபக்சவுக்கு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் காலை வாரிவிட்டனர். சிங்கள மக்களின் மொத்த குடித்தொகையில் கத்தோலிக்க சிங்களவரின் தொகை 5% என்பதும் கவனத்திற்குரியது. இது வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் தீர்க்கமான பங்காற்றக்கூடியது.
எனவே முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் பழிவாங்க வேண்டும் என்ற அடங்கா வெறி அவர்களுக்கு ஏற்பட்டது. இதன் அடிப்படையில் இலங்கையின் படைத்துறை, புலனாய்வுத்துறை மட்டத்தில் ராஜபக்சக்களுக்கு இருந்த பலமான பெரும் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த நாசகார திட்டத்தை ராஜபக்சக்கள் கனகச்சிதமாகச் செய்து முடித்தார்கள்.
இலங்கைத் தமிழர்களை அரசியலிலும் பொருளாதாரத்திலும் வீழ்த்துவதற்கு 1983 ஜூலை படுகொலையைத் திட்டமிட்டு சிங்கள பௌத்த பேரினவாதம் மேற்கொண்டது. ஆனால் அந்த படுகொலையுடன் கொழும்பு வர்த்தகம் தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து சிங்கள வர்த்தகர்களுடைய கைகளுக்கு மாறும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக அது முஸ்லிம்களின் கைகளுக்கு மாறிவிட்டது.
அதேவேளை அடுத்து வந்த யுத்த காலத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி முஸ்லீம் வர்த்தகர்கள் கொழும்பின் பொருளாதாரத்தை தங்கள் கைக்குள் கொண்டு வந்துவிட்டனர். தமிழர்களுக்கு எதிரான போரில் முஸ்லிம்களை இராணுவ புலனாய்வுத் துறையில் அதிகளவில் ஈடுபடுத்தியதோடு ஊர்காவல் படை, ஜிகாத் படை, மற்றும் பாதாள உலக கோஷ்டி என்பவற்றையும் சிங்கள ஆட்சியாளர் தமது தேவைக்காக உருவாக்கினர். முஸ்லிம்களை மோதவிடவும் மேற்படி முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களை தமது இலக்கினை அடைந்தனர்.
தமிழ் மக்களையும், போராட்டத்தையும், போராளிகளையும் வெட்டி வீழ்த்தும் திட்டத்தை இதன் வாயிலாகவும் நிறைவேற்றினர். "2050களில் இலங்கையின் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களாகவும் அவர்களே பெரும்பான்மையாகவும் இருப்பார்கள்" என்றும், "இலங்கையில் முஸ்லீம்கள் பெரும்பான்மை இனமாகப் பெருகி இலங்கையை முஸ்லிம் நாடாக மாற்றி விடுவர்" என்ற பற்றாளி சம்பிக்க ரணவக்கவின் நூலின் இக்கருத்தைச் சிங்கள பௌத்த மக்களிடமும், பௌத்த மகா சங்கத்திடமும், அரசியல் இராஜதந்திர மடங்களுக்கும் "வியத்மக" என்ற சிங்கள தீவிரவாத அறிஞர் அமைப்பு காவிச் சென்று அவர்கள் மத்தியிலும் அச்சத்தை விதைத்திருந்தது.
இந்த அமைப்புதான் ராஜபக்சகளின் இன்றைய மூளையாகவும் செயற்படுகின்றது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் சிங்களம் அடைந்த வெற்றிக்குப் பின்னர் முஸ்லிம்களைக் கருவறுக்கும் கொள்கையைச் சிங்கள பௌத்தம் வகுத்துக் கொண்டது.
கொழும்பின் வர்த்தகமும், இலங்கை பொருளாதாரத்திலும், இலங்கை அரச திணைக்களங்களில் முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகரித்து மேலேங்கிவிட்டதென கொதிப்படைந்தனர். இதனை உணர்ந்து பொறாமை கொண்ட சிங்கள பௌத்த தேசியவாதம் தமிழ் மக்களின் அழித்தொழிப்புக்குப் பின்னர் அடுத்த இலக்காக முஸ்லீம் மக்கள் தெரிவு செய்யப்பட்டுக் குறிவைக்கப்பட்டனர்.
முதற்கட்டமாகக் கொழும்பிலிருந்த முஸ்லீம் பாதாள உலகக் குழுக்கள் இலக்கு வைக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த சில மாதங்களில் முஸ்லிம் பாதாள குழுக்களைச் சேர்ந்த ஐந்து டஜனுக்கும் மேற்பட்டோர் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டனர் என்ற கருத்து உண்டு.
கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். முதல் கட்டமாக முஸ்லிம் வர்த்தகர்களின் இராணுவம் சிதைக்கப்பட்டது. ஆனால் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுத் துறைகளில் அதன் கட்டமைப்புகளில் செயற்பட்ட முஸ்லிம் அடியாட்களும் முஸ்லிம்களின் வலையமைப்பு மற்றும் தொடர்பாடல் அறிவு, தொழில்நுட்ப அறிவு என்பனவற்றை அழித்தொழிக்க வேண்டிய தேவையையும் தருணத்தையும் எதிர்பார்த்திருந்தனர்.
இதனடிப்படையில் நன்கு ஆழமான அதேநேரத்தில் தெளிவான எதிர்கால நலன்களை அடிப்படையாகக் கொண்டு மதியுகமான திட்டம் ""வியத்மக"" அமைப்பால் வகுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஏற்கனவே இலங்கை புலனாய்வுத் துறையில் அங்கம் வகித்து வந்த தேஹரானும் அவரின் மூலமாக வளர்க்கப்பட்ட இஸ்லாமிய ஜிகாத்தையும் அதனுடைய தொடர்பாடல்களையும், இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் தமக்கான கையாட்களாகவும் வளமாகவும் பயன்படுத்தி 2015ஆம் ஆண்டு தமது தேர்தல் தோல்விக்கு வழிவகுத்த முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் ஒரே நேரத்தில் வீழ்த்தக்கூடிய வகையில் மதிநுட்பமாக உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நடாத்தப்பட்டது.
குண்டுத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டு அரை மணித்தியாலத்துக்குள் 167 இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பெயர் விவரங்களை இலங்கை பாதுகாப்புத்துறை வெளியிட்டது என்பதிலிருந்து இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணிக்கான அனைத்து தகவல்களையும் இலங்கை புலனாய்வுத்துறை தனது திட்டப்படி வகுத்து தயார் நிலையில் வைத்திருந்தார்கள் என்பது தெரிகிறது. இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதன் மூலம் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் ஒரே நேரத்தில் மோதவிட்டு இருவரையும் எதிரிகள் ஆக்கினர்.
கிறிஸ்தவர்களை மீண்டும் பௌத்த பேரினவாதத்துடன் கைகோர்ப்பதற்கு அடித்தளமிட்டனர். தமிழர் மீதான யுத்தத்தைப் பயன்படுத்தி இராணுவ தொழில்நுட்பத்தை கற்றிருந்த தொழில்சார் நிபுணத்துவம் பெற்றிருந்த இஸ்லாமியர்களை ஒரே நேரத்தில் கைது செய்து முடக்கினார்கள்.
முஸ்லீம் அடிதடி கூட்டத்தின் அமைப்புகள் குலைக்கப்பட்டன. அதே நேரத்தில் அவர்கள் ""இஸ்லாமியப் பயங்கரவாதிகள்"" என்றும் அவர்களுடன் தொடர்புபட்ட அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் குற்றவாளிகளாகக் காட்டக்கூடிய ஒரு பிம்பத்தை உருவாக்கி முஸ்லிம் அரசியல்வாதிகளைச் சிங்கள பௌத்தத்தின் முன் மண்டியிட வைத்தார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பல துண்டுகளாக உடைத்துப் பலமிழக்கச் செய்யப்பட்டனர்.
இதன் ஊடாக முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு தொகுதியினர் ராஜபக்சக்களுக்கு சேவகம் செய்ய அடிமைகளாக்கப்பட்டனர். முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்க வைக்கப்பட்டன.
அத்தோடு இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ராஜபக்சக்களால் மட்டுமே முடியும் என்ற தோற்றப்பாட்டை மீண்டும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் நிலை நிறுத்திவிட்டனர். இலங்கையில் சிங்கள பௌத்த தேசியவாதம் திரட்சி பெற்று முறுக்கேறிப் பலமடைந்துவிட்டது.
அத்தோடு யுத்த காலத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசியலில் அமைச்சுப் பதவிகளைப் பெற்று முஸ்லீம்கள் அனுபவித்து வந்த அனைத்து அரசு, அரசியல் உயர் பதவிகளும் இன்று பறிக்கப்பட்டு முஸ்லிம்களின் அரசியல் முடக்கப்பட்டிருக்கிறது.
அதன் பின்னணியில் இலங்கை தீவில் முழுமையான பௌத்த நாடாக மாற்றுவதற்கான முறையாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு இனவாத அரசியல் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. ஈஸ்டர் குண்டுவெடிப்பின் மூலம் அதனை இலங்கை பௌத்த பேரினவாதம் மிகக் கச்சிதமாக ஆரம்பித்துவிட்டது. இந்தக் குண்டு வெடிப்பைச் செய்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரேயன்றி முஸ்லிம்கள் அல்ல.
இங்கே முஸ்லிம் அடிப்படை வாதிகள் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டார்கள். ஜிகாத் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு நண்பனின் வடிவில் அமைந்த எதிரியாக உருவாக்கப்பட்டனர்.
எனவே இந்த அடிப்படையில் முஸ்லிம்களை அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் இலங்கை அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என்பதே உண்மையாகும்.
இப்போது அப்பாவி முஸ்லிம்களையும் அடிப்படை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என இலங்கை அரசு முத்திரைகுத்த முற்படுவது இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகராவின் வாயிலாக வெளிவந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
