பணத்தகராறால் நேர்ந்த விபரீதம்: சந்தேகநபரை தேடி பொலிஸார் வலை வீச்சு (VIDEO)
தலவாக்கலையில் நபரொருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தலவாக்கலை, வட்டக்கொடை - மடக்கும்புர வடக்கி மலை பிரிவில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக நேற்று இரவு 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முருகையா சரவணன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பணத்தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை கத்தியால் குத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










