பல ஆயிரம் கோடி ரூபா பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்த மர்ம நபர் கைது
இலங்கையில் பல ஆயிரம் கோடி கணக்கான ரூபாய் பணத்தை பல வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்திருந்த மர்ம நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டந பர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கமல் ஆரியவன்ஷவின் வழிநடத்தலில், துணை பொலிஸ் பரிசோதகர் இந்திக மிலான் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரின் ஒரு வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 கோடிக்கு மேற்பட்ட தொகை இருந்ததுடன், மேலும் நான்கு கணக்குகளில் தலா ரூபாய் 500 கோடி, 600 கோடி மற்றும் 800 கோடி வரையிலான பெரும் தொகைகள் வைப்பு செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான அளவிலான பெரும் நிதி மோசடி சம்பவம் இலங்கையில் முதல் முறையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும், துணை பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு மற்றும் மூத்த துணை பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த விசாரணையில், குறித்த நபர் தனது வங்கிக் கணக்குகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி, புதிய கணக்குகளைத் திறந்து வந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் கோடி கணக்கான பணத்தை வெளிநாடுகளில் வசிக்கும் தனது நெருங்கிய தரகர்களுக்கு அனுப்பி ஏதோ சட்டவிரோத வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.