யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறந்து வைப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவுத் தூபியானது இன்று காலை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி இரவோடு இரவாக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தகர்க்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கைக்கு பலரும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்த நிலையில் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் புதிய நினைவுத் தூபி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி, முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப்பணிகள் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.