வவுனியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் (Video)
முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களின் நினைவாக ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் வவுனியா - குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்றன.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து இது தொடர்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு உயிரிழந்த ஆத்மாக்களின் நினைவாக நெய் விளக்குகள் ஏற்றப்பட்டன.
குறித்த நிகழ்வில் உறவுகளை இழந்தவர்கள் , அந்தணர் ஒன்றிய பிரதிநிதிகள் , சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீபம் ஏற்றி ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தித்தனர்.
அத்துடன் வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் ஏ9 வீதியில் 1915ஆவது நாளாகச் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகைக்கு முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா - வேப்பங்குளம்
வவுனியா வேப்பங்குளம் தூய சூசையப்பர் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு வேப்பங்குளம் தூய சூசையப்பர் ஆலயத்தில் ஆலய பங்குத் தந்தை அருட்பணி ஆரோக்கியம் தலைமையில் இன்று மாலை இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட நினைவு இடத்தில் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி உரை நிகழ்த்தப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆலய பங்கு மக்கள், அருட்சகோதரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
You May Like This Video