முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க நளினிக்கு அனுமதி மறுப்பு! (Video)
தமிழர் கட்சி சார்பில் தனுஷ்கோடியில் நடைபெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள நளினிக்கு பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விடுதலையான நளினி, இன்றைய தினம் (18.05.2023) தனுஷ்கோடியில் இடம்பெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சென்றுள்ளார்.
இவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்ற நளினிக்கு பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை. அதை மீறி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டால், தன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படலாம் என அஞ்சி தனுஷ்கோடியில் அஞ்சலி நிகழ்வில் நடைபெறும் பகுதிக்குப் போகாமல் கடற்கரையில் சிறிது நேரம் இருந்து விட்டு சென்றுள்ளார்.
ஆனால் மாநில உளவுத்துறை மற்றும் பொலிஸார் முன்னிலையில் தமிழர் கட்சி சார்பில் பொலிஸார் அனுமதி இன்றி தனுஷ்கோடியில் மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
ஏறக்குறைய 30 ஆண்டுகள் சிறையில் கழித்த நளினி வேலூர் சிறையில் நீண்ட கால சிறைத் தண்டனை அனுபவித்த பெண் கைதியாவார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த நளினி உட்பட ஆறு பேர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து நளினி காட்பாடியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று ராமேஸ்வரம் வந்திருந்த நளினி தனுஷ்கோடி - அரிச்சல்முனைக்கு சென்றுள்ளார்.
நளினி அங்கு, யாரிடம் பேசினார், என்ன பேசினார், உணவகத்தில் அமர்ந்து உணவு உட்கொண்டமை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கியூ பிரிவு பொலிஸார் உன்னிப்பாகக் கண்காணித்துள்ளனர்.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 10 மணி நேரம் முன்

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
