முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகளுக்கு இராணுவம் தடை (Video)
முல்லைத்தீவு - முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடத்துக்கு இராணுவத்தினர் வருகைதந்து துப்பரவாக்கும் செயற்பாடுகளை நிறுத்துமாறும், இங்கு எந்தவிதமான நிகழ்வுகளையும் செய்ய முடியாது என அச்சுறுத்தியதோடு ஏற்பாட்டு நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர்களை ஒளிப்படம் எடுக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் இடம்பெறவுள்ள நிலையில், இன்றையதினம் (19) அதற்கான ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள 592 பிரிகேட் படைமுகாம் இராணுவத்தினர் வருகைதந்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் முறுகல் நிலை
இதன்போது படையினரோடு இணைந்து புலனாய்வாளர்களும் இந்த பகுதிக்கு வருகைதந்து புகைப்படம் எடுத்தும் விசாரணை மேற்கொண்டும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
படையினரின் இந்த நடவடிக்கை காரணமாக ஏற்பாட்டுகளில் ஈடுபட்டிருந்த மக்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியிருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இராணுவத்தினர் தடை
தொடர்ந்தும் அங்கு துப்பரவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க இராணுவத்தினர் தடை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த முள்ளியவளை பொலிஸார் நினைவேந்தல் குழுவிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு இயந்திரங்களை பயன்படுத்தாமல் துப்பரவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவித்துள்ளனர்.
இதன்பின்னர் படையினர்
அப்பகுதியிலிருந்து சென்றுள்ளதோடு அருகில் உள்ள இராணுவ முகாமிலிருந்து ஒளிப்பட
கமெரா மூலம் தொடர்சியாக காணொளி பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.