புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்: மூன்று கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு (Photos)
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை தொடர்பில், மூன்று கோரிக்கைகள் அடங்கிய மகஜர் முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை தொடர்பில், இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
மகஜர் கையளிப்பு
இதன்போது இந்த நடவடிக்கை மேற்கொண்ட புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.
இச் செயற்பாடு தொடர்பான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
குறித்த பொலிஸ் அதிகாரியும் அவருடன் இருந்த பொலிஸ் அல்லாத நபர்களும், தொலைபேசி அழைப்பிலிருந்த ஒருவரது வழிகாட்டலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையை சமூக வலைத்தளங்கள் மூலம் அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பான விளக்கத்தைக் குறித்த அதிகாரி பகிரங்கமாகத் தெளிவுபடுத்த வேண்டும். என்ற மூன்று முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக வடமாகாண பிரதம செயலாளர், பொலிஸ்மா அதிபர், பொலிஸ் ஆணைக்குழு, மாவட்டசெயலாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ்மா அதிபர், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களுக்காக இவ்வாறு தயாரிக்கப்பட்ட மகஜர்கள், முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
இலங்கை நிர்வாக சேவைச் சங்க வடமாகாணக் கிளையின் கண்டனம்
“இலங்கை நிர்வாக சேவையின் உத்தியோகத்தருக்கு எதிராக புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட பழிவாங்கல் மற்றும் சேவைக்கு வேண்டுமென்றே அபகீர்த்தியை ஏற்படுத்தியமை தொடர்பாக இலங்கை நிர்வாக சேவைச் சங்க வடமாகாணக் கிளையின் கண்டனம்.
2022.07.30 சனிக்கிழமை முறையான தேடுதல் ஆணையின்றிப் பிரதேச செயலாளரை வற்புறுத்தி, புதுக்குடியிருப்புப் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர். ஹேரத் அவர்களால் தேடுதல் மேற்கெள்ளப்பட்டு, அரச கட்டடத்துக்குள்ளிருந்த பொருட்கள் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்டிருந்ததோடு, பொருத்தமற்ற வகையில் தன்னிச்சையான ஊடக அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி, தான் மட்டுமின்றித் தன்னுடன் சமூகமளித்திருந்த ஊடகவியலாளர் மற்றும், சில நபர்களையும் அரச அலுவலகக் கட்டடத்துக்குள் நுழைந்து தேடுதல் நடாத்த அனுமதித்திருந்தார்.
எந்தவித நியாயப்படுத்தக் கூடிய காரணங்கள் இல்லாமல் அதிகார துஸ்பிரயோகமாக பிரதேச செயலாளரது உத்தியோகபூர்வ வதிவிடத்தினை முழுமையாக சோதனை இட்ட போது ஊடகவியலாளர் மற்றும் குழுவினரையும் உள்ளே அனுமதித்து புகைப்படம் எடுத்தமை மூலம் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் திரு.சி.ஜெயகாந்த் (இலங்கை நிர்வாக சேவை தரம் - ஐ) அவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முகமாக செயற்பட்டதுடன் இச்செயற்பாடு இலங்கை நிர்வாக சேவை அலுவலர்கள் அனைவருக்கும் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதனை இலங்கை நிர்வாக சேவைச் சங்கத்தின் வடமாகாண கிளை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நடவடிக்கை மேற்கொண்ட புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.
இச் செயற்பாடு தொடர்பான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். குறித்த பொலிஸ் அதிகாரியும் அவருடன் இருந்த பொலிஸ் அல்லாத நபர்களும், தொலைபேசி அழைப்பிலிருந்த ஒருவரது வழிகாட்டலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையை சமூக வலைத்தளங்கள் மூலம் அவதானிக்க முடிந்தது.இது தொடர்பான விளக்கத்தைக் குறித்த அதிகாரி பகிரங்கமாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
மேற்குறித்த கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை நிர்வாக சேவைச் சங்கம், வடக்கு மாகாண கிளை இன்று (2022.08.08) சுகவீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.
இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் காலதாமதம், வடமாகாண இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராகிய எமக்கு மிகுந்த மனவுளைச்சலை ஏற்படுத்துவதுடன் பொதுமக்களுக்கான சேவை பாதிப்படையவும் வழிவகுக்கும் என்பதனை மனவருத்தத்துடன் தெரியப்படுத்துகின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகங்கயளில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று முன்னேமுக்கப்பட்டது.
பூநகரி ,கிளிநொச்சி, கண்டாவளை, பளை ஆகிய பிரதேச செயலகங்களிலும் 10.00மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கரைச்சி பிரதேச செயலக அலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர். குறித்த போராட்டத்தில் பாதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட போது வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.திலீபன் எம்.பி கவனயீர்ப்பில் ஈடுபட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் தொலைபேசி ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் நேரடியாக அதிகாரிகளிடம் கலந்துரையாடியுள்ளார்.
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.திலீபன் கருத்து தெரிவிக்கையில், இன்று மாலை அமைச்சரவை கூட்டமும் அதனை தொடர்ந்து ஜனாதிபதி சந்திப்பும் கொழும்பில் நடைபெறவுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் பொலிஸ், அமைச்சர் உள்ளிட்ட எல்லாரும் வருவார்கள் அதில் நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் ஒரு கூட்டம் இருக்கின்றது. இதிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொள்கின்றார்.
அங்கும் அரச அதிகாரிகளின் பிரச்சினையினைமுன்வைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவித்துள்ளார்.
இதில் அரச அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களால் குற்றம்
சுமத்தப்பட்டவருக்கு ஏதோ ஒருவகையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
வடக்கில் பிரதேச செயலகங்களில் கவனயீர்ப்பு போராட்டம் (Photos) |