12 வருட யுத்தத்தின் பின்னர் கோவிட் யுத்தத்தில் சிக்கிய முல்லை மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக மோசமான வறுமை நிலவுகின்றது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக ஒரு மாதத்திற்கு மேலாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால், நாளாந்த தொழில்வாய்ப்பை பெற்று வாழ்ந்துவந்த மக்களின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
யுத்தத்திற்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 30 வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்துவந்த நிலையில் அவர்களின் நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்கு வந்து 12 வருடங்களுக்கு மேலாகின்ற போதிலும் இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பல்வேறு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இருந்த போதிலும், யுத்தத்தின் போது பொதுமக்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, ஏற்பட்ட மோசமான உயிரிழப்புக்கள், படுகாயமடைந்த பலர் அவயவங்களை இழந்துள்ளமை என்பன முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய உற்பத்திகளாகிய பால், நெல், கடலுணவு என்பவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு உற்பத்திகளை அதிகரிப்பதற்கும், நாளாந்தம் சுயதொழில் மேற்கொண்டு வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் பயணத்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.