யாழில் கோவிட் மரணத்தால் ஏற்பட்ட குழப்பம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த ஒருவரின் சடலம் மல்லாவிக்கு கொண்டுவரப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த சடலத்தைப் பொறுப்பேற்று உரிய முறைப்படி தகனம் செய்யுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த 81 வயதான வயோதிப பெண்ணின் சடலம் நேற்றையதினம் மல்லாவி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
கொண்டுவரப்பட்ட சடலம் நேற்றைய தினம் உறவினர்களால் வைத்தியசாலையில் வைத்துத் திறக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் பெரும் கலவரமான நிலைமை உருவாகியிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இது தொடர்பில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதேவேளை சடலத்தினை மல்லாவி பிராந்திய சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து தகனம் செய்யுமாறும்,
யாழிலிருந்து சடலம் எவ்வாறு மல்லாக்கு கொண்டுவரப்பட்டது என்றும், சடலம் திறக்கப்பட்டமை தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளுமாறும் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.