முல்லைத்தீவு அளம்பில் விபத்து: சிந்திக்கத் தலைப்பட்ட இளம் தலைமுறை
முல்லைத்தீவில் -அளம்பிலில் நேற்றைய(01.03.2014) தினம் மாலை அளம்பில் குமுளமுனை பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருந்தது.
விபத்துடன் தொடர்புபட்ட மூவரில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஒருவர் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
மேலதிக சிகிச்சையின் போது சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த வீதி விபத்தில் உயிரிழந்தவர் செம்மலை கிராமத்தினை சேர்ந்த நாகரத்தினம் யோகராசா என்பவர் ஆவார்.
எப்படி நடந்தது விபத்து
அளம்பில் சந்தியிலிருந்து குமுளமுனை நோக்கி பயணித்த கிளைமோர் வகை மோட்டார் சைக்கிளும், தங்கப்புரத்தில் இருந்து அளம்பில் சந்தி நோக்கி பயணித்த அப்பாச்சி வகை மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தின் போது தங்கபுரத்திலிருந்து அளம்பில் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களும் அளம்பில் சந்தியிலிருந்து குமுளமுனை நோக்கி பயணித்த ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில், மாஞ்சோலை வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
குமுளமுனை நோக்கி பயணித்த ஒருவரும் அளம்பிலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞனும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் அளம்பிலிலிருந்து மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.(நாகரத்தினம் யோகராசா)
மற்றைய இளைஞன் சிகிச்சை பெற்று வருகின்றார். அப்பாச்சி வகை மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இளைஞர் சிறு காயங்களுடன் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என இந்த விபத்துத் தொடர்பில் இளைஞர் ஒருவர் விபரித்திருந்தார்.
மற்றைய இரண்டு இளைஞர்களும் அளம்பில் தங்கபுரத்தினைச் சேர்ந்த இரு இளைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாகனங்களை பயன்படுத்துவோரிடம் கோரிக்கை
இதுபோன்றதான வீதி விபத்தினால் இவருடன் மூன்றாவது மனிதரையும் செம்மலை கிராமம் இழந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னரும் இருவர் வீதி விபத்துக்களினால் உயிரிழந்த இருந்தனர்.அமரர் புவனேந்திரம், மற்றும் அமரர் பாஸ்கரன் என்பவர்களே அவர்கள் செம்மலையைச் சேர்ந்த இளைஞர் குறிப்பிட்டார்.
விபத்து சம்பவங்களினால் அநியாயமாக உயிர் பிரிகின்ற மனிதர்களையும் படுகாயங்களால் பாதிக்கப்படுகின்ற மனிதர்களையும் நம்பி அவர்கள் சார்ந்த குடும்பங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
பொருளாதார நெருக்கடியான நிலையில், அந்த குடும்பங்கள் எவ்வளவு துன்பங்கள் துயரங்களை அனுபவிக்கப் போகின்றன. இந்த இக்கட்டான நிலைமை அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இடைவெளியாகவே காணப்படும்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு வாகனங்களை செலுத்துகின்ற நாங்கள் எமக்குத் தேவையான அளவான வேகத்துடன், வீதி விதிமுறைகளை கடைப்பிடித்து மற்றைய மனிதர்களை மதித்தவர்களாய் வாகனங்களை செலுத்துவது ஆரோக்கியமானதாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
சிந்திக்கத் தலைப்பட்ட இளம் தலைமுறை
வீதி விபத்துக்களின் போது இழக்கப்படும் உயிர்களையும் சொத்துக்களையும் சாதாரணமாக கடந்து போய்விட முடியாது.
அவை தந்து போகும் விபத்தின் பின்னரான இழப்புக்களை சிந்தித்து செயற்பட வேண்டிய பொறுப்பை இன்றைய இளம் தலைமுறையினர் சிந்திக்க தலைப்பட்டுள்ளனர்.
இது ஆரோக்கியமான மாற்றமாக தான் கருதுவதாக இந்த விபத்துத் தொடர்பில் செம்மலை இளைஞரின் கருத்தையும் களத்தையும் உற்று நோக்கிய சமூகவிடய ஆய்வாளர் வரதன் குறிப்பிட்டார்.
அளம்பில் குமுழமுனை வீதி நான்கு கிலோமீற்றர் தூரத்தினை கொண்டுள்ளன காபைற் வீதியாகும்.வாகனங்களை இலகுவாக இயக்கி பயணிக்க முடியும் என்பதால் வேகம் தொடர்பிலும் வீதியின் விதிமுறைகள் தொடர்பிலும் கவனமெடுக்காத போக்கு அவ்வீதியை பயன்படுத்தும் பலரிடமும் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொலிஸாரின் கடமை
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியுடன் இணைந்துள்ள இந்த வீதியில் வீதிப் போக்குவரத்து பொலிஸார் வீதிக்கண்காணிப்புக்களை மேற்கொள்வது மிகவும் குறைவாக இருப்பதாக தங்கபுரத்தினைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் குறிப்பிட்டார்.
மதுபோதையுடன் பயணத்திலீடுபடும் சாரதிகளை கட்டுப்படுத்துவதோடு பொறுப்பில்லாத வீதி விதிமீறல்களையும் கட்டுப்படுத்தி கண்காணிக்க வேண்டிய தேவை உணரப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
விபத்துக்களினால் இழைக்கப்படும் மனித வலுக்களை ஈடு செய்வது அவர்கள் சார்ந்த குடும்பங்களின் பிரச்சினை மட்டுமல்ல.அவர்கள் சார்ந்த சமூகத்தின் பிரச்சினையாகவும் அதனை நோக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 10 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
